நல்ஆளுகையின் பண்பியல்புகள்
அ) பங்கேற்பு
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆண்களும், பெண்களும் அரசாங்கத்தின் முடிவெடுத்தலில் குரல் கொடுக்க வேண்டும். அதனை அவர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்க கூடிய சட்டப்பூர்வமான இடைநிலை அமைப்புகளின் வாயிலாக பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இத்தகைய பரந்த பங்கேற்பானது மக்களின் பேச்சுரிமை, ஒன்று கூடும் உரிமை மற்றும் ஆக்கப்பூர்வமான பங்கேற்புத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது.
ஆ) சட்டத்தின் ஆட்சி
சட்டக்கட்டமைப்பு என்பது நியாயமாகவும், நடுநிலையுடனும் செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களைக் கூறலாம்.
இ) வெளிப்படைத் தன்மை
கட்டுப்பாடற்ற சுதந்திரமான தகவல் பரிமாற்றமே வெளிப்படைத்தன்மையை கட்டமைக்கிறது. நடைமுறைகள், நிறுவனங்கள் மற்றும் தகவல்கள் ஆகியவை அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக அணுகத்தக்க வகையில் இருப்பதுடன் புரிந்து கொள்ளக்கூடிய அளவிலான தகவல்கள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
ஈ) மறுமொழி பகிர்தல்
நிறுவனங்களும் அவைசார்ந்த செயல்பாடுகளும் மக்களின் தேவைக்கேற்ப செயலாற்ற முயல வேண்டும்.
உ) ஒருமித்த கருத்திலான திசைப்போக்கு
நல் ஆளுகை என்பது மாறுபட்ட விருப்பங்களுக்கு இடையே ஓர் பரந்த ஒப்புதலை ஏற்படுத்த நடுவுநிலைப் பங்காற்றுகிறது. இது குழுவினுடைய சிறந்த நலன்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின்படி அவை எவ்வாறு சாத்தியமாகும் என்பது பற்றியதாகும்.
ஊ) சமசீராக்கம்
ஆண்களும் பெண்களும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான, சமமான வாய்ப்புகள் அல்லது தங்களின் நலனை நிர்வகிப்பதாகும்.
நல்ல அரசாங்கம்
❖ ஒரு மித்த கருத்திலான திசைப்போக்கு
❖ சிறப்பானது மற்றும் செயல்திறன் வாய்ந்தது
❖ சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுகிறது
❖ சமநீதிப்பங்கிலானது மற்றும் உள்ளடக்கியது
❖ பொறுப்பானது ❖ பங்கேற்பிலானது
❖ மறுமொழி பகிர்தல் ❖ வெளிப்படையானது
எ) சிறப்பான தன்மை மற்றும் செயல்திறன்
நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவை தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் சிறப்பாக வளங்களைப் பயன்படுத்தி முடிவுகளைத் தரவேண்டும்.
ஏ) பொறுப்புடைமை
அரசாங்கத்தில் முடிவு எடுக்கும் நிலையில் உள்ளவர்கள், தனியார் துறையினர் மற்றும் குடிமைச்சமூக அமைப்புகள் ஆகியவை பொதுமக்களுக்கும், அமைப்பின் பங்கேற்பாளர்களுக்கு பதில் சொல்ல கடமைப் பட்டவர்களாக இருத்தல் வேண்டும். இப்பொறுப்புடைமை என்பது அமைப்புக்களைப் பொறுத்து மாறுபடுவதுடன் அமைப்பில் எடுக்கப்படும் முடிவானது உட்புறமானதா அல்லது வெளிப்புறமானதா என்பதையும் பொறுத்தாகும்.
ஐ) திறன்சார்ந்த தொலைநோக்கு பார்வை
தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நல்ஆளுகை மற்றும் மனித மேம்பாட்டினை நீண்டகால தொலைநோக்கு பார்வையுடன் அணுகுதல் வேண்டும். மேலும் வரலாறு, பண்பாடு மற்றும் சமூக சிக்கல்களையும் தொலைநோக்குப் பார்வைக்காகக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
ஆதாரம்: (ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டம் - 1997), (நிலையான மனித மேம்பாட்டிற்கான ஆளுகை பற்றிய ஐ. நா.வின் மேம்பாட்டுத் திட்டம்)