நீரின் முரண்பட்ட விரிவு (ANOMALOUS EXPANSION OF WATER)
சாதாரண வெப்பநிலைகளில் திரவங்களை வெப்பப்படுத்தும் போது விரிவடையும் மற்றும் குளிர்விக்கும் போது சுருங்கும். ஆனால் நீர் இதற்கு முரணான ஒரு பண்பைப் பெற்றுள்ளது. 0°C முதல் 4°C வரை வெப்பப்படுத்தும்போது தண்ணீர் சுருங்குகிறது. தண்ணீரை அறை வெப்பநிலையிலிருந்து குளிர்விக்கும்போது 4°C வெப்பநிலையை அடையும் வரை அதன் பருமன் குறையும். 4°C வெப்பநிலைக்குக் கீழே அதனைக் குளிர்விக்கும் போது அதன் பருமன் அதிகரிக்கும். மேலும் அதன் அடர்த்தி குறையும். அதாவது 40C வெப்பநிலையில் நீர் பெரும் அடர்த்தியைப் பெறும். நீரின் இந்தத் தன்மையே நீரின் முரண்பட்ட விரிவு என அழைக்கப்படுகிறது. இது படம் (8.5) இல் காட்டப்பட்டுள்ளது.
குளிர் நாடுகளில், குளிர்காலத்தின்போது ஏரிகளின் மேற்பரப்பு வெப்பநிலை அதன் அடிப்புற வெப்பநிலையை விட குறைந்து காணப்படும் இது படம் (8.6) இல் காட்டப்பட்டுள்ளது. ஏனெனில் திட நீரின் (பனிக்கட்டி) அடர்த்தி சாதாரண நீரின் அடர்த்தியை விடக் குறைவு, 4°C வெப்பநிலைக்கும் கீழே உறைந்த நீர் (பனிக்கட்டி) சாதாரண நீரின் மேலே மிதந்து ஏரிகளின் மேற்பரப்பிற்கு வரும். இதற்குக்காரணம் நீரின் முரண்பட்ட விரிவாகும். ஏரிகள் மற்றும் குளங்களின் மேற்பரப்பு உறைந்து பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருப்பினும், அடியில் உள்ள நீர் உறையாமல் இருந்து நீர்வாழ் உயிரினங்களைக் காக்கும்.