Home | 9 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சாதி எதிர்ப்பு இயக்கங்கள்

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் - சாதி எதிர்ப்பு இயக்கங்கள் | 10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century

   Posted On :  27.07.2022 04:58 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

சாதி எதிர்ப்பு இயக்கங்கள்

சாதி எதிர்ப்பு இயக்கங்கள் (அ) ஜோதிபா பூலே (ஆ) நாராயண குரு (இ) அய்யன்காளி

சாதி எதிர்ப்பு இயக்கங்கள்

(அ) ஜோதிபா பூலே

ஜோதிபா கோவிந்தராவ் பூலே 1827இல் மகாராஷ்டிராவில் பிறந்தார். அவர் 1852ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார். சத்திய சோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம், Truth Seekers Society) எனும் அமைப்பை, பிராமணரல்லாத மக்களும் சுயமரியாதையோடும், குறிக்கோளோடும் வாழத் தூண்டுவதற்காய் நிறுவினார். பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார். அவர் எழுதிய நூலான குலாம்கிரி (அடிமைத்தனம்) அவருடையப் பெரும்பாலான தீவிரக் கருத்துக்களைச் சுருக்கிக் கூறுகிறது.



(ஆ) நாராயண குரு

கேரளாவில் ஏழைப் பெற்றோர்க்கு மகனாகப் பிறந்த நாராயண குரு (1854-1928) மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்தார். பயங்கரமான சாதிக் கொடுமைகளையும், ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களையும் கண்டு மனம் வெதும்பிய அவர் அம்மக்களின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார். அவர்களின் மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை உருவாக்கினார். அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய அவர் அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார். குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் எழுத்தாளார்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.


 

(இ) அய்யன்காளி

அய்யன்காளி 1863இல் திருவனந்தபுரத்தல் உள்ள வெங்கனூரில் பிறந்தார். அப்போது அப்பகுதி திருவிதாங்கூர் அரசரின் ஆட்சிப்பகுதியாகும். குழந்தையாய் இருக்கும் போதே அவர் சந்தித்த சாதியப்பாகுபாடு அவரை சாதி எதிர்ப்பியக்கத்தின் தலைவராக மாற்றியது. பின்னர் அவர் பொது இடங்களுக்குச் செல்லுதல், பள்ளிகளில் கல்வி கற்க இடம் பெறுதல் போன்ற அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார்.


ஸ்ரீநாராயணகுருவால் ஊக்கம் பெற்ற அய்யன்காளி 1907இல் சாது ஜன பரிபாலன சங்கம் (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம் - Association for the protection of the Poor) எனும் அமைப்பை நிறுவினார்.

 

 

Tags : Social and Religious Reform Movements in the 19th Century 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்.
10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century : Anti-Caste Movements Social and Religious Reform Movements in the 19th Century in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : சாதி எதிர்ப்பு இயக்கங்கள் - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்