நீர் | அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் | 8th Science : Chapter 13 : Water
நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல்
நீரானது விலைமதிப்பற்றது
அது உயிரினங்களுக்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால் இன்று கிட்டத்தட்ட அனைத்து நீர்நிலைகளும்
நெகிழிகள் மற்றும் பல நச்சுப் பொருள்கள் போன்ற கழிவுகளால் மாசுபட்டுள்ளன.
விலைமதிப்பற்ற நீரை மாசுபாட்டிலிருந்து காப்பாற்ற நாம் அனைவரும்
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கான சில எளிய ஆலோசனைகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
• மட்கும் தன்மை கொண்டடிடர்ஜெண்ட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.
நச்சுத்தன்மையுடைய வேதிப்பொருள்களைக் கொண்டுள்ள டிடர்ஜெண்ட்டுகளைத் தவிர்க்க வேண்டும்.
• பருத்தி போன்ற இயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஆடைகளை
அணிவதுடன், நைலான் போன்ற செயற்கை இழைகளாலான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும்.
• நெகிழிகள் போன்றகழிவுகளை நீர்நிலைகளில் வீச வேண்டாம். வீட்டுக்
கழிவுகளை மறுசுழற்சி செய்யக்கூடியவை, மறுசுழற்சி செய்ய முடியாதவை மற்றும் மட்கும் தன்மை
கொண்டவை எனப் பிரிக்க வேண்டும். இதனால், நீர்மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம்.
• வீட்டுக் கழிவுநீரை முறையாக சுத்திகரிக்க வேண்டும், மேலும்,
தீங்கு விளைவிக்கும் அனைத்துப் பொருள்களும் அதிலிருந்து அகற்றப்பட வேண்டும். கழிப்பறைகளைச்
சுத்தப்படுத்தவும், தோட்டங்களுக்கும் அதை மீண்டும் பயன்படுத்தலாம்.
• பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு, வேதிப் பொருள்களுக்குப்
பதிலாக உயிரி-பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
• மாட்டுச் சாணம், தோட்டக் கழிவுகள் மற்றும் சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றிலிருந்து உரம் தயாரித்து அவற்றைப் பயன்படுத்தலாம்.
• தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது வெளியேற்றப்படுவதற்கு முன்பே சுத்திகரிக்கப்பட வேண்டும் அல்லது மீண்டும் பயன்படுத்தப்படவேண்டும்.