நீர் | அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நீரை மின்னாற்பகுத்தல் | 8th Science : Chapter 13 : Water
நீரை மின்னாற்பகுத்தல்
நீரை மின்னாற்பகுத்தலை ஒரு சோதனையின் உதவியுடன் எளிதில் செய்து
காண்பிக்க முடியும் இந்த சோதனை அமைப்பில் இரண்டு கார்பன் தண்டுகள் பொருத்தப்பட்ட ஒரு
கண்ணாடிக் குடுவையில் மூன்றில் ஒரு பங்கு நீர் நிரப்பப்படுகிறது. நேர்சுமை கொண்ட கார்பன்
தண்டு ஆனோடாகவும், எதிர்சுமை கொண்ட கார்பன் தண்டு கேத்தோடாகவும் செயல்படுகிறது. இரண்டு
சோதனைக் குழாய்கள் படம் 13.1ல் உள்ளவாறு கார்பன் தண்டுகளுடன் பொருத்தப்பட்டுள்ளன.
மின் தண்டுகள் மின்கலனுடன் இணைக்கப்பட்டு, சோதனைக் குழாய்கள்
ஒரு குறிப்பிட்ட வாயுவால் நிரப்பப்படும் வரை மின்னாற்றல் செலுத்தப்படுகிறது. நிரப்பப்பட்ட
வாயுக்களை எரியும் தீக்குச்சியைக் கொண்டு சோதிக்கும் போது, சோதனைக் குழாயின் அருகில்
தீக்குச்சி வந்ததும் கேத்தோடிலுள்ள வாயு 'பாப்' என்ற ஒலியுடன் அனைவதை நாம் காண முடியும்.
இத்தகைய ஓசையை ஹைட்ரஜன் வாயுவே எழுப்பும் என்பதால், சோதனைச்
குழாயின் உள்ளே இருப்பது ஹைட்ரஜன் வாயுவே என்பது உறுதியாகிறது. ஆனால், ஆனோடினருகில்
கொண்டு செல்லப்படும் தீக்குச்சி மேலும் பிரகாசமாக எரிகிறது, எரியும் வாயு ஆக்சிஜன்
வாயு என்பதை இது உறுதி செய்கிறது. இந்த சோதனையின் மூலம் நீர், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
வாயுக்களால் ஆனது என்பது உறுதியாகிறது. ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவின் விகிதம்
2:1 ஆகும். எனவே, கேத்தோடில் சேகரிக்கப்படும் ஒவ்வொரு இரண்டு பங்கு ஹைட்ரஜன் வாயுவிற்கும்
ஆனோடில் ஒரு பங்கு ஆக்சிஜன் வாயு சேகரிக்கப்படுகிறது.
செயல்பாடு 1
சிறிதளவு
நீரற்ற தாமிர (II) சல்பேட் தூளை கண்ணாடித்தட்டில் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது சிறிதாக
நீரைச் சேர்க்கவும். தூளின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவதைக் காண்கிறாயா? நிறமற்ற தூள்
நீல நிறமாக மாறுவதை நீ காணலாம். இது நீரினைக் கண்டறிவதற்கான சோதனை ஆகும்.