Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சி

நவீனத்தை நோக்கி - சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சி | 11th History : Chapter 19 : Towards Modernity

   Posted On :  15.03.2022 10:05 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி

சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியச் சமூகம் மூடநம்பிக்கை, சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு எனும் நச்சுச் சூழலில் சிக்கியுள்ளது என ஆங்கிலேயர் விளக்கினர்.

சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியச் சமூகம் மூடநம்பிக்கை, சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு எனும் நச்சுச் சூழலில் சிக்கியுள்ளது என ஆங்கிலேயர் விளக்கினர். அவர்களின் கண்ணோட்டத்தில் உருவ வழிபாடும், பல கடவுள் வழிபாடும் வைதீகத்திற்கு வலுவேற்றி, அதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற மக்களைத் தூண்டியவை ஆகும். அதற்கு இணையாகச் சமூகச் சூழலும் உயிரோட்டமில்லாமல் தாழ்ந்த நிலையில் இருந்தது. மேலும் பெண்களின் நிலையும் இரங்கத்தக்க நிலையில் இருந்தது. உடன்கட்டை (சதி) ஏறும் பழக்கம் மிகவும் கண்டனத்திற்கு உள்ளானது. பிறப்பின் அடிப்படையிலான சமூகப் பிரிவுகளும் அதன் விளைவான சாதி முறையும் விமர்சனம் செய்யப்பட்டது. மிக முக்கியமாக ஆங்கிலேயர், தங்களின் தலையீடு இல்லாமல் இத்தகைய தீமைகளிலிருந்து இந்தியர் விடுபட வாய்ப்பில்லை என வாதிட்டனர். இது ஆங்கில ஆட்சியை நியாயப்படுத்துவதற்காகக் கிறித்துவ மதப் பரப்பாளர்களும் பயனெறி முறை பண்பாட்டாளர்களும் முன்வைத்த கருத்தென்பதைச் சொல்லத் தேவையில்லை.

பயனெறிமுறை (Utilitarianism): மிக அதிக எண்ணிக்கையிலானவர்களின் அதிகப்பட்ட மகிழ்ச்சியைக் கோரிய நவீனச் சிந்தனையாளர்கள்.

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா மிகப்பெரிய, மிகவும் சிக்கலான பல்வகைப்பட்டதன்மைகளைக் கொண்ட நாடாக இருந்தது. இடத்திற்கு இடம் நிலைமை மிகவும் மாறுபட்டிருந்தன. காலந்தோறும் சமூகப் பண்பாட்டுத் தீமைகளுக்கு எதிராக இந்தியச் சீர்திருத்தவாதிகள் போராடியிருந்தனர். ஆனால் ஆங்கிலேயரின் அறிவொளிச் சிந்தனைகளுடன் கூடிய வரவு சந்தேகத்திற்கிடமின்றிப் புதிய சவாலை முன்வைத்தது இப்பாடப்பகுதி எவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீர்திருத்த இயக்கங்கள் உதயமாயின என்பதை விவரிக்கின்றது.

மேற்கத்தியப் பண்பாடு, சிந்தனைகள் ஆகியவற்றின் வளர்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரபு சார்ந்த நிறுவனங்கள் தங்களை உயிர்த்துடிப்புள்ளனவாக மாற்றிக் கொள்ளக் கட்டாயப்படுத்தின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் எதிர்ப்புகளின் வெளிப்பாடுகளும், மாற்றத்திற்கான வேட்கையும் பல்வகைப்பட்ட சீர்திருத்த இயக்கங்களின் மூலம் வெளிப்பட்டன. இவ்வியக்கங்கள் இந்திய மக்களின் மதக் கண்ணோட்டத்தையும் சமூக நிறுவனங்களையும் சீர்திருத்துவதையும் ஜனநாயகப்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. புதிய பொருளாதார சக்திகளின் தோற்றம், கல்வியின் பரவல், தேசிய மனப்பான்மையின் வளர்ச்சி, நவீன மேற்கத்திய சிந்தனைகள் - தத்துவங்கள் - பண்பாட்டின் செல்வாக்கு , ஐரோப்பாவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு போன்றவை சீர்திருத்தங்களின் அவசியத்திற்கு வலுசேர்த்தன.

இச்சீர்திருத்த இயக்கங்களுக்குக் கருத்தொற்றுமை வழங்கியது பகுத்தறிவு, மனிதநேயம், உலகளாவிய மத உணர்வு ஆகியனவாகும். இக்கண்ணோட்டம் மரபு சார்ந்தவற்றைப் பகுத்தறிவோடு அணுகவும் சமகால சமூக - சமய நடைமுறைகளைச் சமூகப் பயன்பாடு எனும் பரிமாணத்தில் பார்க்கவும் உதவின. எடுத்துக்காட்டாக பிரம்ம சமாஜத்தில் ராஜா ராம் மோகன் ராய் வேதங்களில் தவறே இருக்க முடியாது எனும் கருத்தைப் புறக்கணித்தார். அலிகர் இயக்கத்தின் போது சையது அகமதுகான் மதம் சார்ந்த சிந்தனைகள் மாற்றப்பட முடியாதவை என்பதை மறுத்தார். எங்களுடைய நிலை அனைத்து மதங்களிலும் உண்மைகள் இருந்தாக வேண்டும் என்பதல்ல, ஆனால் உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்களும் உண்மையானவையே" எனக் கேசவ் சந்திர சென் கூறினார்.

இந்தியச் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டு நீரோட்டத்தை உள்வாங்கிக் கொண்ட இவ்வியக்கங்கள் மொழி, மதம், கலை, தத்துவம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின. விரிந்த கண்ணோட்டத்தில் இச்சீர்திருத்த இயக்கங்களை இரண்டாக வகைப்படுத்தலாம்.

1. சீர்திருத்த இயக்கங்கள்

2. மீட்பியக்கங்கள்

இவ்விருவகைப்பட்ட இயக்கங்களும் தாங்கள் மீட்டெடுக்கவுள்ள மதம் இழந்துவிட்ட தூய்மையைப்பற்றி மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருந்தன. ஒரு சீர்திருத்த இயக்கத்திற்கும் மற்றொன்றுக்குமான வேறுபாடு, இவை ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு மரபுகளைச் சார்ந்திருந்தன என்பதைப் பொறுத்தே அமைந்தது. அடிப்படையில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் மதச் சீர்திருத்தங்களோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகவே இருந்தது. ஏனெனில் சமூகத் தீமைகளான சாதியும், ஆண் பெண் சமத்துவமின்மையும் தங்களின் இருப்பிற்கான நியாயத்தை மதங்களிடமிருந்தே பெற்றன. தொடக்கத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஒரு குறுகலான சமூக அடித்தளத்தைக் கொண்டிருந்தன. சமூகத்தின் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டை சேர்ந்த அவ்வியக்கங்கள் தங்களின் நவீன சிந்தனைகள் நிலவிவரும் சமூக எதார்த்தங்களோடு இணைந்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அதன் பின்னர் சமூக சீர்திருத்த இயக்கங்கள் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை மறுகட்டமைப்பு செய்வதென்பது சமூகத்தின் கீழ் அடுக்குகளுக்குள்ளும் கசியத் துவங்கின. பொது விவாதங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பத்திரிகைகள் ஆகிய வடிவங்களில் அறிவுஜீவிகளிடையே நடைபெற்ற அனல் பறக்கும் விவாதங்கள், புதிய சிந்தனைகளை மக்களிடையே கொண்டு செல்வதிலும் பழைய சிந்தனைகளைப் புதிய வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்வதிலும் பெரும்பங்கு வகித்தன.

தொடக்கத்தில் சமூகப் பேரவை, இந்தியப் பணியாளர்கள் போன்ற அமைப்புகளும், கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்களுமே சமுகச் சீர்திருத்த இயக்கங்களை துரிதப்படுத்தக் காரணங்களாய் இருந்தன. அதற்குத் தெளிவான அறிவுத்திறன் கொண்ட பல தனி நபர்களும் துணை நின்றனர். அவர்களைப் பற்றி வர இருக்கிற பக்கங்களில் நாம் பார்க்கவுள்ளோம். பின் வந்த வருடங்களில், குறிப்பாக இருபதாம் நூற்றாண்டில் இந்திய தேசிய இயக்கம் சமூக சீர்திருத்தத்திற்கான தலைமையையும் அமைப்பையும் வழங்கியது.

பிரம்ம சமாஜம் (1828)

ராஜா ராம்மோகன் ராய் பல்துறை புலமை பெற்றவராவார். அவர் 1828இல் பிரம்ம சமாஜத்தை நிறுவினார். “எங்கும் நிறைந்துள்ள, கண்டறிய முடியாத, மாற்ற முடியாத, இவ்வுலகத்தை உருவாக்கி பாதுகாக்கும் சக்தியை வணங்கி வழிபடுவதில் பிரம்ம சமாஜம் உறுதியாயிருந்தது. இந்து மதத்தைத் தூய்மைப்படுத்தல், ஒரு கடவுள் வழிபாட்டைப் போதித்தல், மனித கண்ணியத்திற்கு முக்கியத்துவம் தருதல், உருவ வழிபாட்டை எதிர்த்தல், சமூகத் தீமையான உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் ஆகியன அவருடைய நீண்டகாலத் திட்டங்களாகும். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் பாரசீகம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் உரையாடக் கூடியவர். அவருடைய சிந்தனைகளும் செயல்பாடுகளும் சமூக சீர்திருத்தங்களின் வழியாக மக்களை அரசியல் ரீதியாக உயர்வடையச் செய்வதை இலக்காகக் கொண்டிருந்தன. அவர் மனித நேயமற்ற சமூகப்பழக்கமான உடன்கட்டை ஏறுதலுக்கு எதிரான மனவுறுதிமிக்க போராளியாவார். 1818 இல் அவர் எழுதியகைம்பெண்களை உயிரோடு எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்குமிடையே நடைபெற்ற விவாதம்எனத் தலைப்பிடப்பட்ட கட்டுரையில் எந்த மதமும் கைம்பெண்களை உயிரோடு எரிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை புனித நூல்களைச் சுட்டிக்காட்டி நிரூபித்தார். கம்பெனி 1829இல் ஒரு சட்டத்தை இயற்றி அதன்மூலம் உடன்கட்டை ஏறுதல் குற்றம் என அறிவித்ததன் மூலம் அவருடைய முயற்சிகள் வென்றன.

பிரம்ம சமாஜத்தின் ஒட்டுமொத்தப் பங்களிப்பைக் கீழ்க்கண்டவாறு சுருக்கிக் கூறலாம்.

1. பலதெய்வ வழிபாடு, உருவ வழிபாடு, தெய்வ அவதாரங்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படையாகக் கண்டனம் செய்தது.

2.  சாதிமுறை, மூட நம்பிக்கைகள், ஆகியவற்றைக் கண்டனம் செய்தது.

3. குழந்தைத் திருமணம், பர்தா முறை, உடன்கட்டை ஏறுதல் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோரியது.

4. கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தது.


பிரெஞ்சுப் புரட்சியின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு ஐரோப்பா சென்ற ராஜா ராம்மோகன் ராய் பிரிஸ்டல் நகரில் மரணத்தைத் தழுவினார். தக்க சமயத்தில் தேவேந்திரநாத் தாகூர் (ரவீந்திரநாத் தாகூரின் தந்தையார்) புத்துயிர் ஊட்டாமல் இருந்திருந்தால் இவ்வியக்கம் விரைவாக வீழ்ந்திருக்கும். அவருக்குப்பின் 1857 முதல் கேசவ் சந்திர சென் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார். இவ்வமைப்பின் வலுவை 1865இல் அது பெற்றிருந்த 54 கிளைகளின் எண்ணிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். (வங்காளத்தில் 50 கிளைகள், வடமேற்கு மாகாணத்தில் 2, பஞ்சாப்பில் 1, தமிழ்நாட்டில் 1 என மொத்தம் 54 கிளைகள்) காலப்போக்கில் பிரம்ம சமாஜம் இரண்டாகப் பிரிந்தது. அவை தேவேந்திரநாத் தாகூரின் தலைமையில் இயங்கிய 'இந்திய பிரம்ம சமாஜம்', கேசவ் சந்திர சென்னுடைய 'சதாரன் பிரம்ம சமாஜ்' என்பனவாகும்.

தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளரான சைதை காசி விஸ்வநாத முதலியார் சமாஜத்தின் கருத்துகளை விளக்கபிரம்ம சமாஜ நாடகம்' எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதினார். கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவாக ஒரு ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார். 1864இல் இதே நோக்கத்திற்காகத்தத்துவ போதினிஎனும் தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.

பிரம்ம சமாஜம் வங்காள சமூகத்தின் வைதீகப் பிரிவினரிடமிருந்தும், இந்து தர்மசபை போன்ற அமைப்புகளிடமிருந்தும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. இருந்தபோதிலும் ஈஸ்வரசந்திர வித்யாசாகர் போன்ற சீர்திருத்தவாதிகளும் இருந்தனர்; ஆனால் அவர் இந்து நூல்களைத் தமக்கு ஆதாரமாக கொண்டார்.

பிரம்ம சமாஜம் பெருமளவிலான மக்களை ஈர்க்கவில்லை எனினும், அது அறிவு ஜீவிகளின் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் முற்போக்குக் கருத்துகளால் கவரப்பட்ட பல இளைஞர்கள் ஆர்வத்தோடு அவற்றைப் பரப்பினர். தாகூரின் குடும்பம் ஒரு பிரம்ம சமாஜக் குடும்பம். அதன் செல்வாக்கை தாகூருடைய கருத்துக்களிலும் எழுத்துக்களிலும் காணலாம்.

பிரார்த்தனை சமாஜம் (1867)

பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பான பிரார்த்தனை சமாஜம் 1867இல் பம்பாயில் ஆத்மராம் பாண்டுரங் என்பவரால் நிறுவப்பட்டது. எம்.ஜி. ரானடே, ஆர்.ஜி. பண்டார்க்கர் ஆகியோர் இவ்வமைப்பில் சேர்ந்து அமைப்புக்கு வலிமை சேர்த்தனர். பிரார்த்தனை சமாஜம் ஓர் அமைப்பு என்ற அளவில் பெரும் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவ்வமைப்பின் உறுப்பினர்களான ரானடே, பண்டார்க்கர், கே.டி. தெலங் போன்றோர் மகாராஷ்டிராவின் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் தலைவர்களாவர். பின்வந்த ஆண்டுகளில் அவர்கள் சமூக சீர்திருத்த இயக்கங்களை நிறுவினர்.

பிரார்த்தனை சமாஜம் பிரம்ம சமாஜத்தைப் போன்றதே என்றாலும் அது மகாராஷ்டிராவைச் சேர்ந்த துறவிகளின் பக்தி மரபுகளோடு உளப்பூர்வமான தொடர்பைக் கொண்டிருந்தது. பிரார்த்தனை சமாஜம், சமூகத்தின் கடைநிலையிலுள்ள பெண்கள், தொழிலாளர் ஆகியோருக்குக் கல்வி வழங்குவதன் மூலம் தனது பணியைத் தொடர்ந்தது. சமபந்தி விருந்து, சாதி மறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் மேம்பாடு ஆகிய சமூக சீர்திருத்தப் பணிகளில் ஆழ்ந்த கவனம் செலுத்தியது.

ரானடேயின் முயற்சியால் உருவாக்கப்பட்ட தேசிய சமூக மாநாடு என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாடு (1885) நடைபெற்று முடிந்தவுடன் கூடும். ஆழமான அறிவும் கூர்மைத்திறனும் கொண்ட நீதியரசர் ரானடேயின் வழிகாட்டுதலில் பிரார்த்தனை சமாஜம் மேற்கிந்தியப் பகுதியில் சமூக சீர்திருத்தத்தின் செயலூக்கமிக்க மையமானது. விதவை மறுமணச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர். மேலும் தக்காணக் கல்விக் கழகம் என்னும் புகழ் பெற்ற அமைப்பைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றார். நாட்டுக்குத் தன்னலமற்றச் சேவை செய்வதற்கு எத்தகைய கல்வி அவசியமோ அக்கல்வியை இளைஞர்களுக்கு வழங்குவதை இவ்வமைப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது. ரானடே 1901இல் இயற்கை எய்திய போது சந்தவர்க்கர் தலைமைப் பொறுப்பேற்றார்.

ஆரிய சமாஜம் (1875)


ஆரிய சமாஜத்தை உருவாக்கியவர் தயானந்த சரஸ்வதி (1824-1883) ஆவார். குஜராத்தை சேர்ந்த அவர் துறவியாகும் எண்ணத்தில் இளமையிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். பதினேழு ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றியலைந்தார். 1863இல் பல ஊர்களுக்குச் சென்று தனது கருத்துக்களைப் போதித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் சில கல்வி நிலையங்களையும் நிறுவினார். 1872இல் கல்கத்தாவில் பிரம்மசமாஜ உறுப்பினர்களைச் சந்தித்தார். 1875இல்சத்யார்த்த பிரகாஷ்எனும் தனது முக்கிய நூலை வெளியிட்டார். அவருடைய கருத்தின்படி சமகாலத்து இந்து மதம் சீர்கேடு அடைந்துவிட்டது. ஆகவே அவர் புராணங்கள், பல கடவுள் வழிபாடு, உருவ வழிபாடு, பிராமண அர்ச்சகர்களின் நடவடிக்கைகள், புனிதப் யாத்திரைகள் ஆகியவற்றை நிராகரித்தார். விதவைத் திருமணத்திற்கான தடையை எதிர்த்தார். சமஸ்கிருத மொழியில் சிறந்த புலமை பெற்றிருந்த அவர்வேதங்களை நோக்கித் திரும்புகஎன அழைப்பு விடுத்தார். வேதங்களை அடிப்படையாக கொண்டு சமூகத்தை வடிவமைக்க விரும்பிய அவர் அதே சமயம் புராணங்களைப் புறக்கணித்தார். ஏனைய சீர்திருத்தவாதிகளைப் போலவே பெண் கல்வி, கைம்பெண் திருமணம் ஆகியவற்றை ஊக்குவித்தார்.

சுவாமி தயானந்த சரஸ்வதி பஞ்சாப் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார். அங்கிருந்தகத்ரிஎனப்படும் வணிகச் சமூகம் காலனிய காலத்தில் மகத்தான வளர்ச்சியைப் பெற்றிருந்தது. ஆனால் பஞ்சாபில் இந்து, முஸ்லீம், சீக்கியரிடையே பெருமளவில் வகுப்புவாத மோதல் நடைபெற்று வந்தது. தயானந்தரின்சுத்திஇயக்கம் இந்துக்கள் அல்லாதவர்களை இந்துக்களாக மாற்ற முயன்று பெரும் எதிர்ப்புகளை குறிப்பாக அகமதியா இயக்கத்தின் எதிர்ப்புகளை சந்தித்தது.

ஆரிய சமாஜம் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்படுகிறது. தயானந்தா ஆங்கிலோ வேதப் பள்ளிகளும் (DAV) கல்லூரிகளும் நிறுவப்பட்டதின் மூலம் தயானந்தரின் செல்வாக்கு இருபதாம் நூற்றாண்டில் தொடர்ந்தது.

இராமகிருஷ்ண இயக்கம் (1897)

சமூக சமயச் சீர்திருத்த இயக்கங்கள் தோன்றியதையும் அதில் வங்காளம் தீவிரமாகப் பங்கேற்று நாட்டின் மற்ற பகுதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்ததையும் நாம் முன்னரே கண்டோம். அதன் தொடர்ச்சியாக வங்காளத்தில் இராமகிருஷ்ண பரம்ஹம்சரின் நினைவாக இராமகிருஷ்ண மிஷன் உதயமானது. இராமகிருஷ்ண பரமஹம்சர் கல்கத்தாவின் அருகேயுள்ள தட்சினேஸ்வர் எனும் ஊரிலுள்ள கோவிலின் ஏழைப் பூசாரி ஆவார். அவர் முறையான கல்வி கற்றவரில்லை. ஆனால் தீவிர ஆன்மீக வாழ்வை மேற்கொண்டவர். அனைத்து மதங்களிலும் இயல்பாக உள்ள உண்மைகள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். பல்வேறு மதங்களின் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு சமயப் பணிகளை மேற்கொண்டு அம்மதங்கள் சார்ந்த நம்பிக்கைகளைச் சோதித்துப் பார்த்தார். அவரைப் பொருத்த அளவில்அனைத்து மதக் கருத்துக்களும் ஒரே இலக்கைச் சென்றடையும் பல்வேறு பாதைகள்என்பதாகும். இராமகிருஷ்ணருடைய பரந்த பார்வையும், இறைநிலை சார்ந்த உள்ளுணர்வும், ஆன்மீகப் பெருவிருப்பமும் பெருவாரியான மக்களைக் கவர்ந்தன. தன் கருத்துக்களை கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகள் மூலமாக விளக்கினார். அவர் மேல் வியப்புற்ற ஒருவர் இவையனைத்தையும்இராமகிருஷ்ண காதாமிர்தாஎனும் தலைப்பில் தொகுத்தளித்துள்ளார்.


அவருடைய சீடர்களுள் மிகவும் புகழ் பெற்றவர், கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்த இளைஞர் நரேந்திரநாத் தத்தா என்பவராவார். இவரே சுவாமி விவேகானந்தர் (1863-1902) எனப் புகழடைந்தார். அவர் தன் குருவின் கருத்துகளை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டு சென்றார். அவருடைய கல்வியறிவும் பேச்சாற்றலும், ஆன்மீக தோற்றமும், அவருடைய வியத்தகு ஆளுமையும் அவருக்கு நாடு முழுவதும் சீடர்களை உருவாக்கியது. அவர்களில் பலர் தேசிய இயக்கத்திலும் இணைந்தனர். விவேகானந்தர் 1893இல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உலகச்சமய மாநாட்டில் பங்கேற்று அங்கு கூடியிருந்தோர் மேல் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். இவ்வியக்கம் பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர்க்கான இல்லங்கள் ஆகியவற்றையும் நிறுவியது. இயற்கை பேரழிவுகளாலும் மனிதர்களால் ஏற்பட்ட பேரழிவுகளாலும் மக்கள் துயருற்ற போது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது.

சுவாமி விவேகானந்தர்  இளமை, தைரியம் ஆகியவற்றின் மறுவடிவமாவார். நவீன இந்தியாவின் விடிவெள்ளி எனக் குறிக்கப்படுகின்றார். வாலன்டைன் சிரோல் என்பாரின் வார்த்தைகளில்தனது ஆளுமைத் திறனால் வெளிநாடுகளில் இந்தியாவின் பாரம்பரியமிக்க நாகரிகத்திற்கும் அதனுடைய புதிதாகப் பிறப்பெடுத்துள்ள தேசம் எனும் உரிமைக் கோரிக்கைக்கும் கண்கூடான அங்கீகாரத்தைப் பெற்று தந்த முதல் இந்தியர்ஆவார்.

பிரம்மஞான சபை (1875)

இந்திய அறிவுஜீவிகள், தாங்கள் மேற்கத்திய அறிவொளி மற்றும் பகுத்தறிவு இயக்கங்களால் விழிப்புணர்வு அடைந்ததாக உணர்ந்த நேரத்தில் மேலை நாடுகளின் சிந்தனையில் ஒரு சோர்வு எற்பட்டு அது ஆன்மவிடுதலைக்கு கிழக்கு நாடுகளை அணுகியது. இச்சிந்தனைப் போக்கிலிருந்தே பிரம்ம ஞான சபை உதயமானது. இவ்வமைப்பு 1875இல் பிளாவட்ஸ்கி அம்மையார், கர்னல் ஆல்காட் ஆகியோரால் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. 1879இல் இந்தியா வந்த அவர்கள் 1882இல் அமைப்பின் தலைமையிடத்தைச் சென்னை அடையாரில் அமைத்தனர். 1893இல் இந்தியாவிற்கு வந்த அன்னி பெசன்ட் அம்மையாரின் தலைமையில் பிரம்மஞானசபை வலுப்பெற்று குறிப்பாகப் பல தென்னிந்திய ஆதரவாளர்களைப் பெற்றது. இந்துப் பாரம்பரியத்தை மேற்கத்திய அறிவுஜீவிகள் ஒத்துக்கொண்டதில் அவர்கள் பெருமை கொண்டனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளில் பிரம்மஞான சபையின் கிளைகள் உருவாயின. பல முரண்பாடுகளுக்கு உள்ளானாலும் இவ்வமைப்பு இந்தியாவில் பௌத்தம் மீண்டும் உயிர் பெற்றதில் முக்கியப் பங்கு வகித்தது. முற்போக்குச் சிந்தனையாளரான அயோத்திதாச பண்டிதர், ஹென்றி ஆல்காட்டுடன் கொண்ட தொடர்பின் காரணமாக நவீன பௌத்தத்திற்கு அறிமுகமானார். ஆல்காட் அயோத்திதாசரை இலங்கைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் புகழ்பெற்ற மீட்பு வாதிகளான அனகரிகா தர்மபாலா, ஆச்சாரிய சுமங்களா உட்பட பல பௌத்த பிட்சுக்களைச் சந்தித்தார்.

Tags : Towards Modernity நவீனத்தை நோக்கி.
11th History : Chapter 19 : Towards Modernity : Emergence of Reform Movements Towards Modernity in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி : சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சி - நவீனத்தை நோக்கி : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 19 : நவீனத்தை நோக்கி