நவீனத்தை நோக்கி - பார்சி சீர்திருத்த இயக்கங்கள் | 11th History : Chapter 19 : Towards Modernity
பார்சி சீர்திருத்த இயக்கங்கள்
தங்கள் தாயகமான பாரசீகத்தில் அடக்குமுறைக்கு உள்ளானதால் ஜொராஸ்டிரியர்கள் பத்தாம் நூற்றாண்டில் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் குடியேறினார். ஒரு வணிக சமூகமாக அவர்கள் நூற்றாண்டுகளின் போக்கில் செல்வச் செழிப்படைந்தனர். நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட அச்சமூகத்தையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீர்திருத்தக் காற்று தழுவத் தவறவில்லை .
1851இல் கல்வி பயின்ற பார்சிகள் அடங்கிய குழுவானது “ரக்னுமய் மத்யஸ்னன் சபா” (Rahnumai Madyasnam Sabha, சமய சீர்திருத்த சங்கம்) எனும் அமைப்பைப் பார்சிகளின் சமூக நிலைகளை மேம்படுத்தவும் ஜொராஸ்டிரிய மதத்தின் தூய்மையை மீட்டெடுக்கும் நோக்கங்களுடனும் உருவாக்கியது. இவ்வியக்கம் நௌரோஜி பர்தோன்ஜி , தாதாபாய் நௌரோஜி, காமா, பெங்காலி ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்டிருந்தது. சீர்திருத்தம் பற்றிய செய்திகளை பரப்புவதற்காக ராஸ்ட் - கோப்தார் (உண்மை விளம்பி) எனும் செய்தித்தாளும் வெளியிடப்பட்டது. பார்சிகளின் மத நடவடிக்கைகளும் சடங்குகளும் சீர்திருத்தப்பட்டன. பார்சி மதத்திற்கு மறு விளக்கமும் தரப்பட்டது. சமூகத் தளத்தில் பார்சி பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காகக் கல்வி கற்பித்தல், பர்தா முறையை நீக்குவது, திருமண வயது வரம்பை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. படிப்படியாகப் பார்சிகள் இந்திய சமூகத்திலேயே அதிக அளவு மேற்கத்தியமயப்பட்ட பிரிவினராக மாறினர். தேசிய இயக்கத்திலும் இந்தியாவைத் தொழில் மயம் ஆக்கியதிலும் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.