இந்திய அரசியலமைப்பு - இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் | 10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution
இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்
1946ஆம் ஆண்டு, அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட,
இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
இச்சபையில் 292 மாகாணப் பிரதிநிதிகள்,
93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள், பலுச்சிஸ்தானின்
சார்பில் ஒருவர் (1) மற்றும் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில்
மூவர் (3) என மொத்தம் 389 உறுப்பினர்கள்
இருந்தனர். அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம், 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் நடைபெற்றது. இச்சபையின் தற்காலிக தலைவராக மூத்த உறுப்பினர் டாக்டர். சச்சிதானந்த சின்கா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பை உருவாக்க கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் போதே அவர்
இறந்ததைத் தொடர்ந்து, டாக்டர். இராஜேந்திர
பிரசாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராகவும், H.C. முகர்ஜி மற்றும் V.T. கிருஷ்ணமாச்சாரி இருவரும் துணைத்
தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத் தொடர்
11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
அவற்றுள் சில ஏற்கப்பட்டன. அரசியல் நிர்ணய சபை
பல்வேறு குழுக்களின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டது.
இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர்.
B.R. அம்பேத்கர் தலைமையின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
எனவே அவர் "இந்திய அரசியலமைப்பின் தந்தை"
என அறியப்படுகிறார்.
டாக்டர். B.R. அம்பேத்கர்
இந்திய
அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பின்னர், பொதுமக்கள், பத்திரிக்கைகள்,
மாகாண சட்டமன்றங்கள் மற்றும் பலரால் விவாதிக்கப்பட்டது. இறுதியாக முகவுரை, 22 பாகங்கள்,
395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகளைக் கொண்ட
இந்திய அரசியலமைப்பு, 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1950ஆம் ஆண்டு ஜனவரி
26ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
உங்களுக்குத்
தெரியுமா?
பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இத்தாலிய பாணியில், அவரது கைப்பட எழுதப்பட்டது.