புவியியல் | சமூக அறிவியல் - மக்கள் தொகை - இந்தியா | 10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade
மக்கள் தொகை
ஒரு
குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் வசிக்கின்ற மொத்த மக்களின் எண்ணிக்கையே
ஒரு நாட்டின் மக்கள் தொகை என்று அழைக்கப்படுகிறது. சீனாவிற்கு அடுத்தப்படியாக
உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. உலகின் மொத்த
நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் உலக
மக்கள் தொகையில் சுமார் 17.5 சதவிகிதத்தை கொண்டுள்ளது. இந்திய மக்கள் தொகை
விகிதம் அதன் பரப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளதை இது காட்டுகிறது. உலகில்
உள்ள ஆறு நபர்களில் ஒருவர் இந்தியராக உள்ளார்.
மக்கள்
தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதி அல்லது
முழுபகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்ள மக்களின் பொருளாதார மற்றும் சமூக
புள்ளி விவரங்களை சேகரித்து, தொகுத்து மற்றும் பகுப்பாய்வு செய்து மக்களியல்
பற்றிய விவரங்களை அளித்தல் ஆகும். இந்த கணக்கெடுப்பு பத்து வருடங்களுக்கு ஒருமுறை
நடத்தப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், நிர்வாகம், திட்டமிடல், கொள்கைகள்
உருவாக்குதல், அரசாங்கத்தின் பல்வேறு திட்ட மேலாண்மை மற்றும்
மதிப்பீடு செய்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவின்
முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. முழுமையான முதல்
மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் 15 வது
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு நடைபெற்றது.
‘மக்கள்
தொகை பரவல்’ என்பது
புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்விடைவெளியில் உள்ளார்கள் என்பதைக் குறிக்கிறது.
இந்திய மக்கள் தொகை பரவல் ஆனது வளங்களின்
பரவலுக்கேற்ப சீரற்று காணப்படுகிறது. தொழில் மையங்கள் மற்றும் செழிப்பான
வேளாண் பிரதேசங்கள் மக்கள் தொகை செறிவுமிக்கதாக காணப்படுகிறது. அதே சமயம் மலைப்பிரதேசங்கள்
வறண்ட நிலப்பகுதிகள், வனப்பகுதிகள்,
தொலைதூரப் பகுதிகள் போன்ற பகுதிகளில் மக்கள் தொகை குறைவாகவும்,
மக்களற்றும் காணப்படுகிறது. நிலப்பரப்பு, காலநிலை,
மண், நீர் பரப்புகள், கனிம
வளங்கள், தொழிலகங்கள், போக்குவரத்து
மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை நாட்டின் மக்கள் தொகை பரவலைப் பாதிக்கும் முக்கிய
காரணிகளாகும்.
199.5
மில்லியன்
மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம் இந்தியாவில் அதிக மக்கள்தொகை
மாநிலமாகும். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, பீகார், மேற்கு
வங்காளம் மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து
மாநிலங்கள் நாட்டின் மக்கள் தொகையில் பாதியைக் கொண்டுள்ளன. இந்தியாவில்
மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் சிக்கிம் ஆகும். புதுடெல்லி 16.75 மில்லியன்
மக்கள் தொகையுடன் யூனியன் பிரதேசங்களிடையே முதலிடம் வகிக்கிறது.
நாட்டின்
மக்கள்தொகை பரவல் சீரற்று காணப்படுவதற்கு பௌதீக, சமூக -
பொருளாதார மற்றும் வரலாற்று காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பௌதீக காரணிகள்
என்பது நிலத்தோற்றம், காலநிலை, நீர், இயற்கைத்
தாவரங்கள், கனிமங்கள் மற்றும் ஆற்றல் வளங்களை
உள்ளடக்கியது. மதம், கலாச்சாரம், அரசியல்
பிரச்சினைகள், பொருளாதாரம், மனித
குடியிருப்புகள், போக்குவரத்து வலைப்பின்னல், தொழில்மயமாக்கல், நகரமயமாதல், வேலை வாய்ப்புகள்
போன்றவை முக்கிய சமூக பொருளாதாரக் காரணிகளாகும்.
இது
சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக்
குறிப்பிடுகிறது. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி
இந்தியாவின் சராசரி மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 ஆகும்.
உலகின் மக்களடர்த்தி மிகுந்த பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் மிக
அதிக மக்களடர்த்தியைக் கொண்ட மாநிலமாக பீகாரும் மிக குறைந்த மக்கள் அடர்த்தியைக்
கொண்ட மாநிலமாக அருணாச்சலப் பிரதேசமும் உள்ளது.
யூனியன்
பிரதேசங்களில் புதுடெல்லி அதிக மக்களடர்த்தியைக் கொண்டதாகவும், அந்தமான்
நிக்கோபார் தீவுகள் குறைந்த மக்களடர்த்தியைக் கொண்டதாகவும் உள்ளன.
மக்கள்
தொகை மாற்றம்
மக்கள்
தொகை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலிருந்து மற்றொரு
காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதையோ அல்லது குறைவதையோ
குறிப்பிடுவதாகும். பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் இடப்பெயர்வு ஆகியவை
மக்கள் தொகை வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. மேலும் இவை மூன்றும் மக்கள் தொகையில்
மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பிறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் 1000 மக்கள்
எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையாகும். இறப்பு விகிதம்
எனப்படுவது ஓர் ஆண்டில் 1000 மக்கள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக்
குறிப்பதாகும்.
கீழ்க்கண்ட
கோட்டுப்படம் 1901ஆம் ஆண்டு முதல் 2011 ஆம்
ஆண்டு வரையான பத்தாண்டுகள் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் காண்பிக்கிறது.