Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 4 : Kedil velu Selvam

   Posted On :  17.08.2023 06:41 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கற்பவை கற்றபின்



1. தமிழகத்தின் பண்டைக் கல்விமுறைகள் குறித்துச் செய்திப்படக்கட்டுரை ஏடு ஒன்றை உருவாக்குக.

விடை

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

சங்ககாலக் கல்வி

கற்பிக்கும் இடங்கள்

குருகுலக் கல்விமுறை

திண்ணைப் பள்ளிக் கல்வி

உயர்நிலைக் கல்விமுறை

ஐரோப்பியரின் கல்விப்பணி

முடிவுரை

முன்னுரை:

கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் காலந்தோறும் மக்களின் தேவைகளுக்கேற்ப கற்றலும் கற்பித்தலும் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று வளர்ந்துள்ளன.

சங்ககாலக் கல்வி:

சங்ககாலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக இருந்தது. அதனால் வணிகம் மற்றும் சமயத்துறைகளிலும் பொதுமொழியாக விளங்கியது. சங்கம் என்ற அமைப்பே பலர்கூடி விவாதிக்கும் இடமானது. மேலும் அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, புத்தப்பள்ளி போன்ற அமைப்புகள் சங்கம் மற்றும் சங்கம் மருவிய காலத்தில் கற்பித்தல்பணியைச் செய்து வந்தன.

கற்பிக்கும் இடங்கள்:

கல்வி கற்பிக்கப்படும் இடங்களை பள்ளி என்றும் கல்லூரி என்றும் இலக்கியங்கள் குறிக்கின்றன.

குருகுலக் கல்விமுறை:

இம்முறையில் மாணவர்கள் ஆசிரியர்களை அணுகி, அவர்களுடன் தங்கி, ஆசிரியர்க்குத் தேவையான பணிகளைச் செய்து கல்வி கற்றனர்.

திண்ணைப் பள்ளிக் கல்வி:

கிராமங்கள் தோறும் திண்ணைப் பள்ளிகள் இருந்தன. இப்பள்ளி ஆசிரியர்கள் கணக்காயர் எனப்பட்டனர். இப்பள்ளிகளில் பாடத்திட்டம், பள்ளி நேரம், பயிற்றுவிக்கும் முறை இவை ஆசிரியரின் விருப்பப்படியே நடந்தன.

உயர்நிலைக் கல்விமுறை:

தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் கல்வி உயர்நிலைக் கல்விமுறை எனப்பட்டது.

ஐரோப்பியரின் கல்விப்பணி

டச்சுக்காரர்களின் சமயப் பரப்புச் சங்கம் முதன்முதலில் தாங்கம்பாடியில் கல்விப் பணியைத் தொடங்கியது. இவர்கள் அறப்பள்ளிகளை நிறுவியதோடு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் தொடங்கினர்.

முடிவுரை:

பண்டைய கல்விமுறை என்பது மனித வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்துள்ளது. பல்வேறு பயிற்சிகளையும், கலைகளையும் கற்றுக்கொள்வதாக இக்கல்வி சிறந்திருந்தது எனலாம்.

 

2. தமிழகத்தில் விடுதலைக்குப் பிறகு கல்விமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடி முடிவுகளைப் பதிவு செய்க.

விடை

கல்வி

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் கல்வி மேம்பாடு அடிப்படையில் அமைந்துள்ளது. விடுதலைக்கு முன் கல்வி, மொழியைப் பயில்வதாகவே இருந்தது. விடுதலைக்குப் பிறகு தேவைகளுக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்தனர்.

சமூகம், நீதி, சமயம், சமதர்மம், உணவு, தொழில், அறிவியல், தொழில்நுட்பம் போன்றவை அடிப்படையாகக் கொண்டது.

1948 - டாக்டர் ராதாகிருஷ்ணன்

1952 – A. லெட்சுமண சுவாமி

1964 - கோத்தாரி

1968 - தேசியகல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு மேம்படுத்தினர்.

அனைவருக்கும் கல்வி, கரும்பலகைத் திட்டம், இடைநிலைக் கல்வி, கல்விமற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திறந்தவெளி பள்ளி, பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி சலுகைகள் போன்றவை மேம்படுத்தப்பட்டுக் கல்வி வளர்ச்சி பெற்றது.

 

3. தாய்மொழிவழிக் கல்வி பற்றிய உங்கள் எண்ணங்களைக் கவிதையாக்குக.

விடை

தாய்மொழிவழிக் கல்வி

வளமான நாட்டுக்கு அடிப்படை

தாய்மொழிக் கல்வியே!

மனித ஆற்றலை வளமாக்கும்

படைப்பாற்றலை அதிகப்படுத்தும்

சிந்தனைத் திறனுக்கு திறவுகோல்

சமூகமாற்றத்திற்கு மகத்தானது

அறிவின் சங்கநாதம் தாய்மொழி

ஆற்றலின் இருப்பிடம் தாய்மொழி

எம்மொழிக் கற்றாலும்

ஏற்றமிகு அறிவைத் தருவது

தாய்மொழிக் கல்வியே.......!

 

4. சூழலோடு பொருந்திக் கல்வியை வளர்த்துக்கொள்பவர் பெண்ணே! ஆணே! - கலந்துரையாடல் நிகழ்த்துக.

விடை

பங்கேற்போர்: ஆசிரியர், அகிலன், இலக்கியா, முகிலன், இனியா.

ஆசிரியர் : வணக்கம் மாணவர்களே!

மாணவர்கள்: வணக்கம் ஐயா!

ஆசிரியர் : இன்றைய நம்முடைய வகுப்பில் சூழலோடு பொருந்திக் கல்வியை வளர்த்துக் கொள்பவர் பெண்ணா, ஆணா என்ற தலைப்பில் கலந்துரையாட இருக்கின்றோம் மாணவர்களே!

மாணவர்கள் : நாங்கள் தயாராக இருக்கின்றோம் ஐயா!

ஆசிரியர் : கல்வி என்பது வெறும் புத்தகத்தைப் படிப்பதன்று. படித்ததை வாழ்க்கையில் பயன்படுத்தும்போதுதான் கற்ற கல்வி முழுமை பெறும்.

அகிலன் : ஐயா, நீங்கள் சொல்லும் அறிவுரைகளையெல்லாம் நாங்கள் தொடர்ந்து பின்பற்ற முயற்சி செய்கிறோம் ஐயா...

இல்லார்க்கு ஒன்று ஈவதே ஈகை' என்று கூறினீர்கள்.

அதனால் சமூகத்தில் கைவிடப்பட்ட பெரியோர்க்குத் தேடிச்சென்று உணவுப் பொருட்களை வழங்கினோம். பெண்களைக் காட்டிலும் ஆண்களாகிய நாங்கள் பாதுகாப்போடு சென்று உதவிகளைச் செய்ய முடிகிறது ஐயா....

ஆசிரியர் : அருமை, அகிலன்

இலக்கியா : ஐயா... நாங்களும் கூடத்தான் எங்கள் தோழியரில் யாரேனும் உணவு, எடுத்து வராவிட்டால் பகிர்ந்து உண்கின்றோம். ஏழ்மை நிலையிலுள்ள எங்கள் தோழி கமலாவுக்கு வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு நாங்களே புத்தாடை எடுத்துத் தரப் போகின்றோம் ஐயா...

ஆசிரியர் :  அருமை, அருமை...

எதிர்காலத்தில் தங்கள் சூழலுக்கேற்ற வகையில் கல்வியை வளர்த்துக் கொள்வது ஆண்களா, பெண்களா....

முகிலன் : ஐயா...உறுதியாக ஆனர்கள்தான். பள்ளி அளவில் எவ்வளவு நன்றாகப் படித்தாலும் பெண்களை உயர்கல்விக்கு அனுப்ப சில பெற்றோர் யோசிக்கவே செய்கின்றனர். ஆனால் ஆண்கள் தாங்கள் விரும்புகின்ற எத்துறையையும் கற்றுத் தங்களை வளர்த்துக் கொள்ள முடிகிறது. பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே வாய்ப்பு அதிகம்.

இனியா : ஐயா... இதை முற்றிலும் மறுக்கிறேன். முகிலன் மிகப் பழங்கதையைக் குறிப்பிடுகிறார். பெண்களாகிய நாங்கள், ஆண்களுக்கு நிகராக, ஏன் அவர்களை விட ஒருபடிமேல் சூழல்களை வென்றெடுத்து எங்களை வளர்த்துக் கொண்டு சாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் இல்லாத துறைகளே இன்றைக்கு இல்லை... ஐயா...

ஆசிரியர் : அருமை... சிறப்பு..

ஆண்களாக இருக்கட்டும்...

பெண்களாக இருக்கட்டும்...

சூழலோடு பொருந்திக் கல்வியை வளர்த்துக் கொண்டு நலமான வாழ்வை வாழ வேண்டியது மிகவும் முக்கியம். வாழ்த்துகள் மாணவர்களே!

மாணவர்கள் : நன்றி ஐயா!

 

5. தொல்காப்பியம் குறித்து நீங்கள் அறிந்த செய்திகளைத் தொகுத்து ஒப்படைவு உருவாக்குக.

விடை

தொன்மை + காப்பியம் - தொல்காப்பியம்.

தொல்காப்பியம் இன்றும் கிடைக்கப்பெறும் மிகப்பழைய தமிழ் இலக்கண நூல். இலக்கிய வடிவில் இருக்கும் இலக்கண நூம்.

பழங்காலத்து நூலாக இருப்பினும் இன்றைய தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல். 1602 நூற்பாக்கள் கொண்டது.

மூன்று அதிகாரம்: எழுத்து, சொல், பொருள்.

பாயிரம் தந்தவர் : பனம்பாரனார்; உரையாசிரியர் : இளம்பூரணர்

சிறப்பு: தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல் விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளை தன்னகத்தே கொண்டது. தமிழகத்தின் பண்டைக்கால வரலாற்றுச்சான்றுகளுடன் அறிய உதவும் நூல் ஆகும்.

 

6. பாரதி பணிபுரிந்த இதழ்களின் அட்டைப் படங்களையும் கருத்துப்படங்களையும் இணையத்தில் சேகரித்துப் படத் தொகுப்பு செய்யவும்.

விடை


 

7. 1. பூவை வீட்டு இறங்காதே

இறக்கை முறிந்த வண்ணத்துப் பூச்சியே

உனக்காக எறும்புகள்.

2. மனிதர்க்கு உணவாவதை எண்ணி

கண்ணீர் விட்டனவோ மீன்கள்

கடல் நீரில் உப்பு,

- இக்கவிதைகள் படைப்பாக்க உத்திகளால் தனித்துவம் பெற்றுள்ளன விளக்குக.

விடை

பின்னர் வரக்கூடிய துன்பத்தை முன்னாலேயே அறிவுறுத்தும் யுக்தி

கவிஞன் தன் மனக்குறிப்பைக் கவிதையில் ஏற்றிக் கூறுவது. தற்குறிப்பு ஏற்ற அணி வகையாகும்.

பூவை விட்டு இறங்கினால் உன்னைத் துன்புறுத்த எறும்புகள் காத்திருக்கின்றது என்று எதிர்கொள்ளவிருக்கும் துன்பத்தை முன்கூட்டியே அறிவிக்கும் யுக்தியாகும்.

பின்னால் தனக்கு ஏற்படக்கூடிய அவலத்தை முன்னரே அறிந்து துன்புறுதல். கவிஞர் தான் நினைக்கும் கருத்தினைப் பாடல்களில் ஏற்றிக்கூறுவது. ஏற்றிக்கூறுவது. இதுவும் தற்குறிப்பேற்ற அணிவகையாகும்.

மீன், தான் மனிதர்க்கு உணவாகப் போகிறோம் என்று வருந்தி விட்டக் கண்ணீர்தான் கடல்நீரில் உப்பு கலந்து இருப்பதற்குக் காரணமாகும் என்பதை அறிவிக்கும் ஒரு யுக்தியாகும்.


இலக்கணத் தேர்ச்சி கொள்

1. உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்?

விடை

உவமையானது, வினை, பயன், வடிவம், உரு என்னும் நான்கின் அடிப்படையில் தோன்றும்.

 

2. உவமைத்தொடர்களால் அழைக்கப்பெறும் சங்கப்புலவர்கள் பெயர்களைக் தொகுத்து அவற்றில் உள்ள உவமைகளைக் கண்டறிக.

விடை

காரிக்கண்ணனார் - கார் போன்ற கருமையான கண்களை உடையவராதலால் இவ்வாறு அழைக்கப்பட்டார்.

கருங்குழல் ஆதனார் - கருமையான குழலை உடையவராதலால் இவ்வாறு பெயர் பெற்றார்.

செம்புலப்பெயல் நீரார் - செம்மண்ணில் பெய்த மழைநீர் மண்ணின் நிறத்தையே ஏற்கும் என்ற உவமைத்தொடரால் அழைக்கப்பட்டார்.

காக்கைப் பாடினியார் - காகத்தின் குரல் இனிமையாக இல்லாவிட்டாலும் குழாத்தைக் கூவி அழைக்கும் குணம் கொண்டதால் பெயராக ஏற்றுக்கொண்டார்.

 

3. ஒட்டுப் போடாத

ஆகாயம் போல -இந்த

உலகமும் ஒன்றேதான் - இக்கவிதையில் பயின்று வருவது

அ) உவமை

ஆ) உருவகம்

இ) உள்ளுறை

ஈ) இறைச்சி

[விடை: அ) உவமை]

 

4. கீழ்க்காண்பனவற்றுள் 'இறைச்சி' பற்றிய கூற்றைத் தேர்க.

அ) குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்.

ஆ) ஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும்.

இ) வினை, பயன், வடிவம், நிறம் ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும்.

ஈ) உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருள்.

[விடை: ஈ) உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருள்.]

 

5. உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டினைச் சான்றுகளுடன் ஆய்க.

விடை

கவிஞர் தான் கூறக்கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளைக் கருப்பொருள்களின் மூலம் உவமைப்படுத்துவதை உள்ளுறை உவமை என்பர்.

சான்று:

ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த

குறும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை

தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின்

பாம்புமதன் அழியும் பானாட் கங்குல்' - பெருங்குன்றூர்க்கிழார் (அகம் - 8)

பாடல் பொருள்:

தலைவன் பிறர் அறியாமல், தலைவியைச் சந்திக்க இரவில் வருகிறான். அவ்வேளையில் பசியுடன் அலையும் கரடியொன்று, ஈசல்கள் நிறைந்த பற்றில் கையைவிட்டுப் பார்க்கிறது. அந்தப் பற்றில் சுருண்டு படுத்திருந்த பாம்பினைக் கரடி அறியவில்லை. கரடியின் நகங்கள் பட்டு, பாம்பு வலியால் துடிக்கிறது. இங்குக் கரடியின் செயலும் பாம்பின் துன்பமும் காட்டப்படுகின்றன.

பாடல் உணர்த்தும் உள்ளுறை உவமம்:

இப்பாடலில் உள்ளே உறைந்திருக்கும் செய்தி வேறு. இரவு நேரத்தில் காட்டைக் கடந்து வரும் தலைவனின் செயலால் தலைவி அஞ்சி வருந்துவதாக உள்ளது. கரடி தலைவனுக்கும், பாம்பு தலைவிக்கும் குறியீடுகளாய் அமைந்து உள்ளுறை உவமம் உருவாகிறது.

இறைச்சி - விளக்கம்:

உள்ளுறை போன்றே இறைச்சி என்பதும் அகப்பாடலில் வருகின்ற மற்றொரு உத்தி உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருளே இறைச்சி.

சான்று:

நசைபெரிது உடையர் நலீகலும் நலீகுவர்

அன்பின் தோழி அவர் சென்ற ஆறே' - குறுந்தொகை - 37

பொருள்:

தலைவன் விரைவில் வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றுவிக்கிறாள். தலைவன் செல்லும் வழியில் ஆண்யானை தன் பெண்யானையின் பசியைப் போக்க, யா பட்டையை உரித்து அதிலுள்ள ஈரச்சுவையைப் பருகச் செய்யும். இது பாடல் கருத்து.

பாடல் உணர்த்தும் குறிப்புப் (இறைச்சிப்) பொருள்:

இப்பாடலின் உள்ளே சொல்லப்படாத குறிப்பு ஒன்றுள்ளது. தலைவன் யானைகளின் அன்புக்காட்சியினைப் பார்ப்பான் என்பது குறிப்புப் பொருளாகும். இக்குறிப்புப் பொருளே இறைச்சி ஆகும்.

Tags : Chapter 4 | 11th Tamil இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 4 : Kedil velu Selvam : Tamil Language Exercise - Questions and Answers Chapter 4 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம்