வரலாறு - களப்பிரர்களின் காலம் - சங்கம் மருவிய காலம் | 11th History : Chapter 5 : Evolution of Society in South India
களப்பிரர்களின் காலம் - சங்கம் மருவிய காலம்
சங்க காலத்திற்கும், பல்லவர், பாண்டியர் காலத்திற்கும் இடைப்பட்ட (தோராயமாக, பொ.ஆ. 300-600க்கும்) காலமே, தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என அறியப்படுகிறது. இவ்விடைவெளியில் போர்க்குணம் மிக்க களப்பிரர்கள் என்போர் தமிழகத்தைக் கைப்பற்றித், தமிழகத்தின் பாரம்பரிய அரசுகளான மூவேந்தர்களையும் தோற்கடித்ததால் இக்காலமானது களப்பிரர்களின் இடைக்கால ஆட்சி என்றும், இருண்ட காலமென்றும் தொடக்க கால வரலாற்று ஆசிரியர்கள் சித்தரித்தனர். ஒருவேளை இவ்விடைப்பட்ட காலத்தில் தான் முந்தைய தமிழ்ப் பண்பாட்டின் பல தனிக்கூறு மறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இக்கருத்தை சரியானது என ஏற்பதிற்கில்லை.
ஆனால் தமிழ்ப் பண்பாட்டின் பல சிறந்த கூறுகள் இக்காலத்தில்தான் தோன்றியிருக்கிறது. இக்காலத்தில்தான் உன்னதமான தமிழ் இலக்கியமான திருக்குறளும் அதோடு ஏனைய பதினென் கீழ்க் கணக்கு நூல்களும் இயற்றப்பட்டன. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சிறந்த காப்பியங்களும் இக்காலத்தைச் சார்ந்தவையே. இக்காலத்தில் அவைதீக மதங்களான சமணமும் பெளத்தமும் பெரும் செல்வாக்குப் பெற்றமையால், வைதீக வேதபுராண கருத்துக்களைக் கொண்டிருந்த அறிஞர்கள், ஆட்சி புரிகின்ற களப்பிரர்கள் தீயவர்கள் என்ற கருத்துத் தோற்றத்தை உருவாக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.
இக்கால கட்டம் பற்றி அண்மைக் காலத்தில் முன்வைக்கப்பட்ட புதிய விளக்கத்தின் படி இக்காலகட்டம் ஒரு பெறும் மாற்றத்தை நோக்கி இட்டுச் சென்ற மாறுதல் காலமாகும். இந்த மாறுதல்களின் விளைவாகவே, பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வட தமிழகத்தில் பல்லவரும், தென்தமிழகத்தில் பாண்டியரும் அரசு மற்றும் சமூகத்தை உருவாக்க வழி உருவானது என்று அண்மைக்கால வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். தொடக்கத்தில் இந்நாடுகளின் அரசர்கள் சமண பௌத்த மதங்களையே ஆதரித்தனர். ஆனால் அவர்கள் படிப்படியாக சைவ - வைணவ பக்தி இயக்கத்தால் புத்துயிர் பெற்ற வேத புராண மதங்களின் செல்வாக்கிற்கு உள்ளாயினர். ஆனால் இம்மதங்கள் பக்தி இயக்க அடியார்களின் வெறுப்பைத் தூண்டும் வகையில் பொது மக்களிடையே சமண பௌத்த மதங்கள் பெரும் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தன.
சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன், கூற்றன் என்ற இரு அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறது. அவர்களின் குடும்பம் வம்சாவளி ஆகியன குறித்து எக்குறிப்பும் காணப்படாவிட்டாலும் சில அறிஞர்கள் அவர்களைக் களப்பிர அரசர்கள் எனக் கருதுகின்றனர். பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டின் மூன்றாவது கால்பகுதி காலத்தில் களப்பிரர்கள் ஆட்சி பாண்டியர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது.