வரலாறு - கருத்தியலும் மதமும் - தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் | 11th History : Chapter 5 : Evolution of Society in South India
கருத்தியலும் மதமும்
முறைபடுத்தப்பட்ட மத நடவடிக்கைகளின் தோற்றம் அசோகர் காலத்திலிருந்து தென்படத் தொடங்குகிறது. இக்காலகட்டத்தில்தான் பௌத்த மதம் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது. அசோகரின் மகள் போதிமரத்தை இலங்கைக்குக் கொண்டு சென்றதாகக் கருதப்படுகின்றது. அசோகருக்கு முன்னதாக சந்திரகுப்த மௌரியர் கர்நாடகத்திற்கு வருகை தந்ததாகவும் பழங்கதை ஒன்று உள்ளது. சாதவாகனர்களும், சங்க காலத்து அரசர்களும், இக்சவாகுக்களும் வேதவேள்விகளை ஆதரித்தனர். பிராமணருடைய வருகை குறித்தும் வேதச் சடங்குகள் நடைபெற்றமைக்கும் சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. ஆனால் இக்காலகட்டத்தில் ‘வர்ணாசிரமம்’ என்னும் கருத்தியல் தமிழ்ப் பகுதிகளில் வேரூன்றவில்லை.
பௌத்த மதம் தொடர்பான சான்றுகள் தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் கழிமுகப் பகுதிகள் பல பெளத்த மையங்களைக் கொண்டுள்ளன. பௌத்த மதம் எந்த அளவிற்கு ஆழமாக வேறூன்றியிருந்தது என்பதை அமராவதி, நாகர்ஜுனகொண்டா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் உணர்த்துகின்றன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்களில் பௌத்த ஸ்தூபிகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. சமண மதத்தோடு ஒப்பிடுகையில் பௌத்த மதத்திற்கான சான்றுகள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன. தமிழகத்தில் காணப்படும் தமிழ் - பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய எண்ணற்ற குகை உறைவிடங்கள் பௌத்த மதத்தைக் காட்டிலும் சமண மதம் செல்வாக்குடன் விளங்கியதைப் பறை சாற்றுகின்றன. பொதுமக்களின் மீது இம்மதங்கள் கொண்டிருந்த செல்வாக்கை அறிந்துகொள்ள இயலவில்லை என்றாலும், வணிகர்களும் சாதாரண மக்களும் சமணத் துறவிகளுக்குப் பாறை மறைவுகளில் படுக்கைகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர், காணிக்கை செலுத்தினர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. சங்கம் மருவிய காலத்தில் சமணர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அளப்பரிய சேவை செய்துள்ளனர்.