வரலாறு - மௌரியர் காலத் தென்னிந்தியா | 11th History : Chapter 5 : Evolution of Society in South India
மௌரியர் காலத் தென்னிந்தியா
அசோகருடைய கல்வெட்டுகளே (பொ.ஆ.மு.
270-30) தென்னிந்தியாவின் அரசியல் நிலை குறித்த முதல் சித்திரத்தை வழங்குகிறது. அசோகரின்
இரண்டாம் பாறைக் கல்வெட்டில் மௌரிய அரசின் எல்லைக்கப்பால் அமைந்த அண்டை அரசுகளானத்
தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரச மரபுகளான சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்திய புத்திரர்
ஆகியோரைக் குறிப்பிடுகின்றார். அப்பகுதிகளில் அசோகர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான
இருவகைப்பட்ட மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தார் எனச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில்
மௌரியப் பேரரசு கர்நாடகா, ஆந்திராவின் வடபகுதிகளையும் கொண்டிருந்தது. தமிழக அரசுகள்
சுதந்திரமான அண்டை நாடுகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஏறத்தாழ
2400 பாடல்கள் கொண்ட இலக்கியக் கருவூலமாகும். மூன்று முதல் எண்ணூறு அடி அளவு கொண்ட
இப்பாடல்கள் பாணர்களாலும் புலவர்களாலும் இயற்றப்பட்டவை.
எட்டுத்தொகையாவன: 1. நற்றிணை 2. குறுந்தொகை 3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து 5. பரிபாடல் 6. கலித்தொகை 7. அகநானூறு 8. புறநானூறு
பத்துப்பாட்டாவது: 1. திருமுருகாற்றுப்படை 2. பொருநராற்றுப்படை
3. சிறுபாணாற்றுப்படை 4. பெரும்பாணாற்றுப்படை 5. முல்லைப்பாட்டு 6. மதுரைக் காஞ்சி
7. நெடுநல்வாடை 8. குறிஞ்சிப்பாட்டு 9. பட்டினப்பாலை 10. மலைபடுகடாம்.
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும்
நீதி பற்றியும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றியும் பேசுவனவாகும். திருக்குறளும் நாலடியாரும்
இதில் முதன்மையானவை.
முதன்மையான காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பண்பாடு மற்றும்
மதவரலாற்றுக்கு சிறந்த சான்றுகளாகப் பயன்படுபவை.
சங்க
காலப் பெண்பாற் புலவர்
சங்கப் பாடல்களின் தொகுப்பிற்கு பங்களித்த
450க்கும் மேற்பட்ட புலவர்களில் முப்பது பெண்பாற் புலவரும் அடங்குவர். அவர்கள் 150க்கும்
மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளனர். அவர்களுள் ஒளவையார், அல்லூர்நன்முல்லையார், காக்கைப்பாடினியார்,
காவற்பெண்டு, நல்வெளியார், ஒக்கூர் மாசாத்தியார், பாரிமகளிர் ஆகியோர் மிகமுக்கியப்
பெண்பாற் புலவர்களாவர்.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும், சாதவாகனர்
எழுச்சிக்கு முன்னரும் பல சிற்றரசுகள் தோன்றியுள்ளன. அவற்றின் அரசர்களைப் பற்றி போதுமான
செய்திகள் கிடைக்கவில்லை. எனினும் அவர்கள் வெளியிட்ட நாணயங்கள், அவர்கள் சிறுபகுதிகளை
ஆண்டு வந்த குறுநில மன்னர்கள் என்பதைத் தெரிவிக்கின்றன.