வரலாறு - நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் தோற்றம் | 9th Social Science : History : Early Tamil Society and Culture
நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் தோற்றம்
சங்க காலத்தில்தான் தமிழ்நாட்டில் நகரங்கள் முதன்முறையாக உருப்பெற்றன. சாலைகளும் குடியிருப்புப் பகுதிகளும் கொண்ட திட்டமிட்ட நகரங்களில் செங்கற்களால் ஆன கட்டடங்கள் கட்டப்பட்டன. வீடுகளுக்குக் கூரையாக ஓடுகள் வேயப்பட்டன. உறைகிணறுகளும், சேமிப்புக் கிடங்குகளும் இருந்தன. சில நகரங்கள் துறைமுகப்பட்டிணங்களாகவும், கைவினைத் தொழில் மையங்களாகவும் இருந்தன.
கிழக்குக் கடற்கரையில் அமைந்த அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டிணம், அழகன்குளம், கொற்கை ஆகிய நகரங்களும், கேரளத்தின் பட்டணம் என்ற நகரும் துறைமுகங்களாகவும் விளங்கியவை. காஞ்சிபுரம்,
உறையூர், கரூர், மதுரை, கொடுமணல் ஆகிய நகரங்கள் உள்நாட்டு வணிக மையங்களாகத் திகழ்ந்தன. இம்மையங்களில் பல வகைப்பட்ட பொருள்களும் பண்டங்களும் உற்பத்தி செய்யப்பட்டுப் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இந்த நகரங்கள் அளவில் பெரியவை. நகரங்களைத் தவிர எண்ணற்ற சிற்றூர்களிலும் மக்கள் வாழ்ந்திருந்தனர். வெண்கலப் பொருள்கள்,
மணிகள், சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், தமிழ் பிராமி எழுத்துகளில் மக்களின் பெயர் பொறித்த மட்கலங்கள் போன்றவை இந்த இடங்களில் கிடைத்துள்ளன.
நகர்மையம் என்பது என்ன?
திட்டமிட்ட வடிவமைப்பும், செங்கல் கட்டுமானங்களும் கொண்ட மக்கள் வசிப்பிடமே நகரம் ஆகும். வேளாண்மை , கால்நடைவளர்ப்பு அல்லாத ஏனைய தொழில்களில் ஈடுபடுகின்ற மக்கள் அவ்விடங்களில் பெருமளவில் வாழ்வார்கள். நகரங்களில் பற்பல உற்பத்திப் பணிகள் நடைபெறும்.