அறிமுகம் | வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் | 9th Social Science : History : Early Tamil Society and Culture
அலகு 3
தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
கற்றல் நோக்கங்கள்
❖ தொடக்க காலத் தமிழ்ச் சமூகம் குறித்து அறிந்துகொள்வதற்கான தமிழ் இலக்கியம்,
தொல்லியல், கல்வெட்டு, தமிழ் அல்லாத பிறமொழி ஆவணங்கள் ஆகிய சான்றுகளின் சிறப்புகளை அறிதல்
❖ திணை சார்ந்த சமூக வாழ்க்கை முறைகள் குறித்துத் தெரிந்துகொள்ளுதல்
❖ சங்க கால இலக்கியம், அரசியல், சமூகம், பொருளாதாரம், நகரமயமாக்கம் ஆகியவற்றை அறிதல்
அறிமுகம்
கி.மு. (பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்ப் பண்பாடு தோன்றிவிட்டது. தமிழகத்து வணிகர்களும் கடலோடிகளும் கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் பண்பாட்டுத் தொடர்புகளையும் கொண்டிருந்தனர். வெளிநாட்டு வணிகர்கள் கடல்வழியே தமிழகத்திற்கு வந்துபோயினர். வெளிநாட்டினருடன் ஏற்பட்ட பண்பாட்டுத் தொடர்புகளும், வணிக நடவடிக்கைகளும், தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் வாழ்க்கைமுறைகளும் இணைந்து தமிழ்நாட்டில் முதல் நகரமயமாதல் உருவானது. தலைநகரங்களும் துறைமுகப்பட்டிணங்களும் தோன்றின. நாணயங்களும் பணமும் புழக்கத்திற்கு வந்தன. 'தமிழ் பிராமி' என்ற வரிவடிவத்தில் தமிழ் மொழி முதன்முதலில் எழுதப்பட்டது. ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. செம்மொழித் தமிழ்ச் செய்யுள்கள் இயற்றப்பட்டன.