அறிவியல் - விசை மற்றும் இயக்கம் | 10th Science : Chapter 1 : Laws of Motion
விசை மற்றும்
இயக்கம்
அரிஸ்டாட்டில் கிரேக்க நாட்டில்
வாழ்ந்த ஒரு சிறந்த அறிவியல் மற்றும் தத்துவ அறிஞர் ஆவார். அவரது கூற்றுப்படி, இயங்குகின்ற
பொருள்கள் யாவும் தாமாகவே இயற்கையான தத்தமது ஓய்வுநிலைக்கு வந்து சேரும். அவற்றினை
ஓய்வு நிலைக்கு கொண்டு வர புறவிசை எதுவும் தேவையில்லை எனக் கூறினார். இவ்வாறு
இயங்கும் பொருட்களின் இயக்கத்தினை “இயற்கையான
இயக்கம்" (விசை சார்பற்ற இயக்கம்) என வரையறுத்தார்.
அவ்வாறு இல்லாமல், இயங்கும் பொருட்களை ஓய்வுநிலைக்குக்
கொண்டு வர புறவிசை தேவைப்படும் எனில், அவ்வகை இயக்கத்தினை “இயற்கைக்கு மாறான இயக்கம்” (விசை சார்பு
இயக்கம்) என வரையறுத்தார். மேலும் இரு வேறு நிறை கொண்ட பொருள்கள் சம உயரத்தில்
இருந்து விழும்போது, அதிக நிறை கொண்ட பொருள் வெகு வேகமாக
விழும் என்றுரைத்தார்.
அறிவியலறிஞர் கலிலியோ விசை, நிலைமம் மற்றும்
இயக்கம் பற்றி கீழ்கண்டவாறு விளக்கினார்.
(i) இயற்கையில் உள்ள புவிசார் பொருள்கள் யாவும்
தத்தமது இயல்பான ஓய்வு நிலையிலோ அல்லது சீரான இயக்க நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
(ii) புறவிசை ஏதும் செயல்படாத வரை பொருள்கள் யாவும்
தத்தமது முந்தைய நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்.
(ii) பொருளின் மீது
விசையின் தாக்கம் இருக்கும் போது, தம் நிலை மாற்றத்தினை
தவிர்க்க முயலும் தன்மை அதன் நிலைமம் எனப்படும்.
(iv) வெற்றிடத்தில் வெவ்வேறு நிறை கொண்ட பொருள்கள்
யாவும் ஒரே உயரத்தில் இருந்து விழும்போது, அவை ஒரே நேரத்தில்
தரையை வந்தடையும்.