நிலைமத்தின் வகைகள் - நிலைமம் | 10th Science : Chapter 1 : Laws of Motion
நிலைமம்
நாம் பேருந்திலோ மகிழுந்திலோ பயணம்
செய்யும் போது, திடீரென அவை நிறுத்தப்படும் போது, நமது உடல்
முன்னோக்கி சாய்கின்றது. ஓய்வு நிலையில் உள்ள பேருந்து, திடீரென
நகரும் போது, உள்ளிருக்கும் நாம் பின்னே சாய்கின்றோம்.
தொடர்ந்து இயங்கி கொண்டுள்ள
வாகனத்தில் திடீரென வேகத்தடை ஏற்படும்போது பேருந்து நின்றுவிட்டாலும், பயணியர் தொடர்ந்து
இயக்க நிலையிலேயே இருக்க முயற்சிப்பதால் முன்னோக்கி விழுகின்றனர். அதேபோல் ஓய்வு
நிலையில் உள்ள பேருந்து, திடீரென நகர ஆரம்பிக்கும் பொழுது,
அவற்றுடன் இணைந்த பயணியர், தொடர்ந்து ஓய்வில்
இருக்க முயல்கின்றனர். எனவே பேருந்து நகர்ந்தாலும், அவர்கள்
தமது பழைய நிலையை தக்க வைக்க பின்னோக்கி சாய்கின்றனர்.
ஒவ்வொரு பொருளும் தன் மீது சமன்
செய்யப்படாத புற விசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையையோ, அல்லது
சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை ‘நிலைமம்’ என்றழைக்கப்படுகிறது.
செயல்பாடு 1
கண்ணாடிக்குவளை
ஒன்றை எடுத்துக்கொள்ளவும். அதன் மீது மெல்லிய காகித அட்டை ஒன்றை
வைக்கவும்.அட்டையின் மத்தியில் நாணயம் ஒன்றை வைக்கவும். அட்டையினை வேகமாக விரலால்
சுண்டவும்.என்ன காண்கிறாய்? அட்டை வேகமாக நகர்ந்து கீழே விழ, நாணயம் குவளைக்குள் விழுகிறது.
இச்செயல்பாட்டில் காகித அட்டை
நகர்ந்தாலும், நாணயமானது தொடர்ந்து தமது ஓய்வின் நிலைப்புத் தன்மையை நீட்டிக்க
முயற்சிக்கிறது. இந்த ஓய்விற்கான நிலைமப் பண்பினால், அட்டை
நகர்ந்தவுடன் புவி ஈர்ப்பு விசையினால் நாணயம் குவளையில் விழுகிறது.
1. நிலைமத்தின் வகைகள்
அ) ஓய்வில்
நிலைமம்:
நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தமது
ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு ஓய்வில் நிலைமம் எனப்படும்.
ஆ) இயக்கத்தில்
நிலைமம்:
இயக்க நிலையில் உள்ள பொருள், தமது இயக்க நிலை
மாற்றத்தை எதிர்க்கும் பண்பு இயக்கத்தில் நிலைமம் எனப்படும்.
இ) திசையில் நிலைமம் :
இயக்க நிலையில் உள்ள பொருள், இயங்கும் திசையில்
இருந்து மாறாது, திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு
திசையில் நிலைமம் எனப்படும்.
2. நிலைமத்திற்கான எடுத்துக்காட்டுகள்
� நீளம்
தாண்டுதல் போட்டியில் உள்ள போட்டியாளர் நீண்ட தூரம் தாண்டுவதற்காக, தாம் தாண்டும் முன்
சிறிது தூரம் ஓடுவதற்கு காரணம் இயக்கத்திற்கான நிலைமம் ஆகும்.
� ஓடும்
மகிழுந்து வளைபாதையில் செல்லும் போது பயணியர், ஒரு பக்கமாக சாயக் காரணம் திசைக்கான நிலைமம்
ஆகும்.
� கிளைகளை
உலுக்கிய பின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள், பழுத்த பின் விழும் பழங்கள் இவை யாவும்
ஓய்விற்கான நிலைமத்திற்கு எடுத்துகாட்டாகும்.