வரலாறு - இந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பம் ஏற்படுத்திய தாக்கம் | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes
இந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பம் ஏற்படுத்திய தாக்கம்
கங்கைச் சமவெளி மக்கள் தங்களது உணவுத்தேவையை விட அதிகமான அளவில் பயிர்களை உற்பத்தி செய்ய அறிந்து கொண்டனர். எனவே மற்றொரு பகுதி மக்கள் வேறு சில கைத்தொழில்களை மேற்கொள்ள வாய்ப்பு அமைந்தது. விவசாயிகளைப் போலவே இந்த கைவினைக் கலைஞர்களும் தமக்கு மூலப்பொருட்களைச் சேகரித்துத் தரவும், தமது உற்பத்தியை விநியோகிக்கவும் சிலரை நம்பி இருக்க நேர்ந்தது. ஆரம்பக்கட்ட நகரமயமாக்கல் இரண்டு விதங்களில் நிகழ்ந்தது. ஒன்று, சில கிராமங்கள் இரும்புத் தொழில், மட்பாண்டங்கள் செய்தல், மரவேலைகள் தொழில், நெசவு போன்றவற்றில் ஈடுபட்டதன் மூலமாக நிகழ்ந்தது. இன்னொன்று, கிராமங்களின் தனித்திறமை கொண்ட கைவினைஞர் குழுக்கள் மூலப் பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு அருகில் இருந்தவாறு, சந்தைகளை இணைத்ததன் மூலம் நிகழ்ந்தது. இப்படி மக்கள் ஒரே இடத்தில் குவிந்தது கிராமங்கள் நகரங்களாகவும் பரிமாற்ற மையங்களாகவும் வளர்ச்சிபெற உதவியது. வைசாலி, சிராவஸ்தி, இராஜகிருஹம், கௌசாம்பி, காசி ஆகியவை கங்கைச் சமவெளியின் சில முக்கியமான வர்த்தக மையங்களாகும்.