வரலாறு - ஜொராஸ்ட்ரியனிசம் | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes
ஜொராஸ்ட்ரியனிசம்
நாம் அறிந்த மிகப் பழமையான உலக மதங்களில் ஜொராஸ்ட்ரியனிசமும் ஒன்று. கி.மு. (பொ.ஆ.மு). ஆறாம் நூற்றாண்டில் செழித்தோங்கி,
மத்தியக் கிழக்கில் ஆதிக்கம் செலுத்திய மூன்று மாபெரும் பாரசீகப் பேரரசுகளுக்கு அரச மதமாக அது இருந்தது. ஜொராஸ்ட்ரியனிசத்தைத் தோற்றுவித்தவர் பாரசீகத்தைச் சேர்ந்த ஜொராஸ்டர். அவர் தம் மக்கள் மிகப் பழங்காலத்துக் கடவுளர்களை வணங்குவது கண்டு வேதனையுற்று அவர் அதற்கெதிராகக் கிளர்ச்சி செய்தார். ஒளிக் கடவுளான அஹுர மஸ்தா தான் உலகின் ஒரே கடவுள் என்று பிரகடனம் செய்தார்.
ஜொராஸ்ட்ரியர்களின் புனித நூல் ஜென்ட் அவெஸ்தா என்பதாகும். இது பல்வேறு காலகட்டங்களின் புனித இலக்கியங்களான பிரார்த்தனைப் பாடல்கள்,
வேண்டுதல்கள், சட்டங்கள், புராணங்கள், புனிதக் கதைகளின் தொகுப்பாகும். ஜொராஸ்ட்ரிய தத்துவங்களும் சடங்குகளும் வேதங்களில் சொல்லப்படும் தத்துவங்கள், சடங்குகளை ஒத்துக் காணப்படுகின்றன.
ஒரு மதம் அல்லது ஓர் அரசு அல்லது ஒரு சமூகத்தின் முதன்மையான நோக்கம் ஒழுக்கத்தை வளர்த்தெடுப்பதுதான் என்று ஜொராஸ்டர் போதித்தார். எண்ணம், சொல், செயல் என அனைத்திலும்புனிதமாக இருப்பதுதான்மிக உயரிய மதக் கோட்பாடாகும். அஹுர மஸ்தாவிடம் 1. ஒளி, 2. நல்ல மனம், 3. நன்மை , 4. அரசாட்சி, 5. பக்தி, 6. ஆரோக்கியம், 7. இறவாத் தன்மை ஆகிய தன்மைகள் உள்ளன என்றார். அஹுர மஸ்தா அனைத்தும் அறிந்தவர். சகல சக்திகளும் கொண்டவர். எங்கும் நிறைந்திருப்பவர். ஜொராஸ்ட்ரிய மதத்தில் பலி, உருவ வழிபாடு ஆகியவை இல்லை . கடவுளின் வடிவமாகத் தீயை வணங்குவதுதான் உயர்ந்த வழிபாட்டு முறையாகக் கருதப்பட்டது. தானம் செய்வதற்கும் ஏழைகளுக்குச் சேவை செய்வதற்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.