நிதிப் பொருளியல் - தற்கால அரசின் பணிகள் | 12th Economics : Chapter 9 : Fiscal Economics
தற்கால அரசின் பணிகள்
தற்கால அரசானது காவல் அரசாக மட்டுமில்லாமல் நலம் பேணும் அரசாக உள்ளது. இது பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகளை உருவாக்குவதையும், நாட்டிற்கு உள்ளேயும், வெளியிலும் நிலைத்தன்மையை உறுதி செய்தல், நீடித்த நெடுநாள் வளர்ச்சிக்கான காரணிகளை பாதுகாத்தல் ஆகியவற்றில் பெரிய அளவிலான பங்கினை ஆற்றுகிறது. அரசின் முக்கியப் பணிகள் பின்வருவனவாகும்.
(i) பாதுகாப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழிவிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதே அரசின் முக்கியப் பணியாகும். அரசு போதுமான அளவில் காவல் மற்றும் ராணுவ நிலைகளை பராமரித்து பாதுகாப்பு பணிகளைச் செய்கிறது.
(ii) நீதி
நீதியை பரிபாலனம் செய்தல் மற்றும் தகராறுகளைத் தீர்த்தல் ஆகியவை அரசின் பணியாகும். அரசானது, அனைத்து வகுப்பினரும் சமநீதி பெறும் வகையில் நீதி அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
(iii) நிறுவனங்கள்
தனி நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தற்கால அரசின் பணியின் கீழ் வருகிறது. அரசானது சில நிறுவனங்களின் சொந்தமாகக் கொண்டு அவற்றினை வெற்றிகரமாக செயல்படுத்துவதும் அரசின் பொறுப்புகளாகும்.
(iv) சமூக நலன்
நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி, சமூக பாதுகாப்பு, சமூக காப்பீடு, உடல்நலம் மற்றும் துப்புரவு போன்றவற்றை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.
(v) கட்டமைப்பு:
தற்கால அரசுகள் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பினை உருவாக்குவதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது.
(vi) பேரின பொருளாதாரக் கொள்கை
பேரின பொருளாதார நோக்கங்களை அடைவதற்காக நிதிக் கொள்கை மற்றும் பணக் கொள்கை ஆகியவற்றை அரசு மேற்கொள்கிறது.
(vii) சமூக நீதி
பொருளாதாரத்தின் வளர்ச்சி நிலையின் போது சமூகத்தின் சில பிரிவனர் மற்றவர்களைவிட கூடுதல் நன்மை அடைகின்றனர். நிதித் தீர்வை மூலம் வருவாயை மறுபகிர்வு செய்வதற்கு அரசானது தேவைப்படுகிறது.
ஒருசிலரிடம் பொருளாதார சக்தி குவிந்து காணப்படும் தீமையை களைவது அரசின் முக்கியப் பணியாகும். இதனை களைவதற்காக முற்றுரிமை மற்றும் வாணிப கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.
அரசு மூன்று விதமான வழிகளில் பங்காற்றுகிறது.
i) பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்பவராக
ii) பொது மற்றும் சமூக பண்டங்களை அளிப்பவராக
iii) பொருளாதார முறையை ஒழுங்குபடுத்தபவராக.