நிதிப் பொருளியல் - உள்ளாட்சி நிதி மற்றும் உள்ளாட்சி அமைப்பின் வகைகள் | 12th Economics : Chapter 9 : Fiscal Economics
உள்ளாட்சி நிதி
உள்ளாட்சி நிதி எனப்படுவது இந்தியாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பற்றியதாகும். இந்தியாவில் பல்வேறு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. நம் நாட்டில் தற்போது செயல்பாட்டில் இருக்கக்கூடிய முக்கியமான நான்கு உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
உள்ளாட்சி அமைப்பின் வகைகள்
1. கிராம ஊராட்சி
2. மாவட்ட வாரியங்கள் அல்லது ஜில்லா அமைப்பு
3. நகராட்சி
4. மாநகராட்சி
1. கிராம ஊராட்சி
* தோற்றம் : ஊராட்சியின் எல்லை வரம்பு என்பது ஒரு வருவாய் கிராமமாகும். சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய கிராமங்கள் ஒரு ஊராட்சியின் கீழ் குழுவாக செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் நிறுவப்பட்டுள்ளது.
* பணிகள்
அ) ஒரு. ஊராட்சியின் செயல்பாடுகள் குடிமை, பொருளாதார மற்றும் பலவற்றை உள்ளடக்கியிருக்கும். இதனால் சிறிய இடர்பாடுகள் ஊராட்சியிலேயே அகற்றப்படும்.
ஆ) சாலைகள், தொடக்க பள்ளிகள், கிராம சுகாதார நிலையங்கள் ஆகியவைகள் பஞ்சாயத்துக்களால் நிரிவகிக்கப்படுகிறது
இ) குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு நீர் வழங்கல் அவைகளின் எல்லைக்குள் பொறுப்பாகும் மற்றும் பண்னை பராமரிப்பு, சந்தை, சேமிப்பு கிடங்கு ஆகியவற்றையும் மேலாண்மை செய்கிறது.
கிராம ஊராட்சிகளின் வருவாய் ஆதாரங்கள்
கிராம ஊராட்சிகளின் வருவாய் ஆதாரங்கள் பின்வருவனவாகும்.
i) பொது சொத்து வரி
ii) நிலம் மீதான வரி
iii) தொழில் வரி
iv) விலங்குகள் மற்றும் வாகனங்கள் மீதான வரி
பிற வரிகளாக சேவை வரி, நுழைவு வரி, திரையரங்கு வரி, புனிதஸ்தலங்கள் வரி, திருமணம் மீதான வரி, பிறப்பு மற்றும் இறப்பு மீதான வரி மற்றும் உழைப்பாளர் மீதான வரி போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. உண்மையில், மாநில அரசின் அனுமதியுடன் மட்டுமே கிராம ஊராட்சிகளால் வரி விதிக்கப்படுகிறது. இந்த அமைப்பு வரி விதிப்பதற்கு சில வரம்புகள் உள்ளன.
2. மாவட்ட வாரியங்கள் அல்லது ஜில்லா அமைப்புகள் :
* தோற்றம்: அனைத்து கிராமப் பகுதிகளையும் உள்ளடக்கி மாவட்ட வாரியங்கள் மற்றும் ஜில்லா அமைப்புகள் மாவட்ட அளவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியத்தின் வரம்பெல்லை வருவாய் மாவட்டம் ஆகும்.
* பணிகள்: தமிழ்நாட்டில், ஜில்லா அமைப்பு என்பது மாவட்ட அளவில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியத்தின் பணிகளாக கிராம ஊராட்சிகளுக்கு உதவி செய்வது மற்றும் வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்றவையாகும்.
மாவட்ட வாரியங்களின் வருவாய் ஆதாரங்கள்
i) மாநில அரசிடமிருந்து பெறும் மானிய உதவி
ii) நில தீர்வைகள்
iii) சுங்க கட்டணம்
iv) சொத்திலிருந்து பெறுகிற வருமானம் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து பெறக்கூடிய கடன்கள்
v) வளரச்சிப் பணிகளுக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கான மானியங்கள்
vi) பொருட்காட்சிகள் மற்றும் கண்காட்சிகளிலிருந்து பெறப்படுகிற வருமானம்
vii) மாநில அரசு ஏற்றுக்கொள்கிற சொத்துவரி மற்றும் பிற வரிகள்
3. நகராட்சி அமைப்புகள்
* தோற்றம் மற்றும் பணிகள் : நகரப் பகுதிகளில் ஏற்படுத்தப்படுகிற இவ்வமைப்புகள் அப்பகுதியல் உள்ள துப்புரவு, பொது சுகாதாரம், சாலைகள், விளக்குகள், குடிநீர் வினியோகம், சாலைகளை தூய்மைப்படுத்துதல், பூங்காக்களை பராமரித்தல், சுகாதார நிலையங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள், பாதாள சாக்கடை வசதி, தொடக்க கல்வி வசதி, பொருட்காட்சி மற்றும் கண்காட்சிகளை அமைத்தல் ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. ஆயினும், அனைத்து பணிகளும் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படுகின்றது.
i) சொத்து மீதான வரிகள்
ii) பொருட்கள் மீதான வரிகள், குறிப்பாக நுழைவு வரி.
iii) தனிப்பட்ட வரிகள், தொழில்வரி, வியாபாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றின் மீதான வரிகள்
iv) வாகனங்கள் மற்றும் விலங்குகள் மீதான வரிகள்
v) திரையரங்கு வரி
vi) மாநில அரசிடமிருந்து பெறுகிற மானிய உதவி
4. மாநகராட்சி
* தோற்றம் மற்றும் பணிகள்: நகராட்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது, இவைகள் பரந்த அதிகாரங்களையும், அதிக சுதந்திரத்தையும் பெற்றுள்ளது. குடிநீர் வினியோகம் மற்றும் பாதாள சாக்கடை, தெரு விளக்குகள், சேரிகளை பண்படுத்துதல், நகர் திட்டமிடல் போன்ற பணிகளை செய்கிறது. நகர மக்கள் தொகை அதிகரித்து வருகிற நிலையில் மநாகராட்சியின் பணிகளும் பெருகிக் கொண்டே வருகிறது.
மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள்
1. சொத்து மீதான வரி
2. வாகனங்கள் மற்றும் விலங்குகள் மீதான வரி
3. வாணிபம் மற்றும் வேலைவாய்ப்பு மீதான வரி
4. திரையரங்கு வரி மற்றும் காட்சி வரி
5. நகரத்திற்குள் கொண்டு வரும் பொருட்கள் மீதான வரிகள்
6. விளம்பரங்கள் மீதான வரிகள்
7. நுழைவு வரி மற்றும் முனைம வரி
சட்டத்திற்குட்பட்டு தங்கள் விருப்பப்படி அதிகபட்சமாகவோ அல்லது குறைந்த பட்ச விகிதமகவோ ஒரு நியாயமான அளவவில் வரி விதிக்க மற்றும் மாற்றியமைக்க சுதந்திரம் உள்ளது.