தவறான
பயன்பாடு மற்றும் வகைகள்
கொடூரமான, வன்முறையான,
தீங்கு விளைவிக்கின்ற அல்லது காயமேற்படுத்துகின்ற தாக்குதலுக்கு
ஒருவரை மற்றொருவர் உள்ளாக்குவது தவறான பயன்பாடு எனப்படும். இது உடல்,
உணர்வு அல்லது மனம், வாய்மொழி, குழந்தைகள்
மற்றும் பாலியல் ரீதியிலான தவறான பயன்பாடுகளை உள்ளடக்கியதாகும். இது குடும்பம்
மற்றும் அக்குடும்பத்தை சாராத நபர்களினால் ஏற்படுகிறது. இனி சிறுவயது குழந்தைகளை
தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பாலியல் சார்ந்த தவறான பயன்பாடுகள், அதன் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் விளைவுகளைப் பற்றி அறிந்து
கொள்ளலாம்.
குழந்தைகளைத் தவறாகப்
பயன்படுத்துதல் என்பது அனைத்து விதமான உடல் மற்றும் உணர்வுரீதியான துன்புறுத்தல், பாலியல்
சார்ந்த தவறான பயன்பாடுகள், சுரண்டல் ஆகியவற்றிற்கு உள்ளாக்குதல் போன்றவை ஆகும். இதன் காரணமாக அக்குழந்தையின்
ஆரோக்கியம், உயிர்வாழ்தல், வளர்ச்சி
ஆகியவை பாதிக்கப்படுகின்றது. குழந்தைகளை உடல் ரீதியிலான தவறாகப்
பயன்படுத்துதல் என்பது குழந்தைக்கு அச்சுறுத்தல், அடித்தல்,
உதைத்தல் மற்றும் தாக்குதல் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
செயல்களாகும்.
ஒருவர் மற்றொருவரின் மீது தனது
அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்தி பாலியல் ரீதியாலான தீங்கு விளைவிப்பது பாலியல்
துன்புறுத்தலாகும். இது பாதிக்கப்பட்டவரில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இளம் சிறுமிகள் மற்றும் பெண்கள் பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தலுக்கு
ஆளாகின்றனர். பொதுவாக இது பணிபுரியும் இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
வாய்மொழி கருத்துகள், நகைச்சுவை (கேலி செய்தல்), சைகைகள் மற்றும் தவறான பார்வை போன்றவை அதிகமாகக் காணப்படும்
முறைகேடுகளாகும். இதனால் மனதளவிலும், உடல் நோய்களாலும்
மற்றும் உணவு உண்ணுவதிலும் (உணவூட்டக் குறைபாடு) குறிப்பிட்ட நபர்கள் பாதிப்புக்கு
உள்ளாகின்றனர்.
தங்களை தவறாகப்
பயன்படுத்துகிறார்கள் என்பதை உணரவே முடியாத நிலையில் இருப்பதால், குழந்தைகள்
பாலியல் முறையிலான துன்புறுத்தலின் முக்கிய இலக்காகக் கருதப்படுகிறார்கள். பொதுவாக,
இச்செயலில் ஈடுபடுபவர்கள் அக்குழந்தைக்கு நன்றாகத் தெரிந்தவராகவும்,
அதே பகுதியில் வசிப்பவராகவும் இருப்பார்கள். குழந்தைகளின்
வெகுளித்தனத்தைப் பயன்படுத்தி, அவர்களைக் கவரும் வகையில்
(சாக்லேட்டுகள் மற்றும் பொம்மைகளைப் பயன்படுத்துதல்) ஏமாற்றி அவர்களைப்
பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பாலியல் ரீதியான
துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளில் பிறப்புறுப்புக் காயம், வயிற்று வலி,
அடிக்கடி ஏற்படும் சிறுநீர்த் தொற்று மற்றும் நடத்தையில் மாற்றம்
போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
மேலும் அறிந்து கொள்வோம்
பெண்கள்
மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல்
குற்றங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக 2012 - இல்
போக்சோ (POCSO - Protection of Children from Sexual Offences). சட்டத்தை அறிமுகப்படுத்தியது பாலியல் நோக்கத்திற்காக குழந்தைகளை கடத்திச் செல்லும்
நபர்களும் இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உள்ளாகின்றனர்.
பாலியல்
தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசம் போன்ற
குற்றங்களிலிருந்து பாதுகாத்தல். இத்தகைய குற்றங்களை விரைந்து விசாரிக்க சிறப்பு
நீதிமன்றங்களை அமைத்தல்.
4. தவறான
பயன்பாட்டுக்கு உள்ளான குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான அணுகுமுறைகள்
தவறான பயன்பாட்டினால்
துன்பத்திற்கு உள்ளான குழந்தைகளை கண்காணித்தல், மதிப்பிடுதல் மற்றும் அளவிடுவதற்கான வழிமுறைகளாவன:
குழந்தைகள்
உதவிக்கரம் (Child
Helpline)
குழந்தைகள் உதவிக்கரம் சமூகப்
பணியாளர்களை நியமித்து குழந்தைகளுக்கு உணவு, உறைவிடம் மற்றும் பாதுகாப்பு வழங்குவதில் உதவி
புரிகிறது.
குழந்தைகளுக்கு
ஆலோசனை வழங்குதல்
உளவியலாளர்கள், சமூகப்
பணியாளர்கள் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டுதல்
மற்றும் தொடர்ச்சியான ஆதரவு அளித்தல்.
குடும்ப
ஆதரவு
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு
குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களுடைய
பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு முறையான கவனத்துடன் கூடிய பாதுகாப்பை வழங்க
வேண்டும்.
மருத்துவப்
பராமரிப்பு
பாலியல் பாதிப்புக்கு உள்ளான
குழந்தைகள் மன அழுத்தத்திலிருந்து விடுபட பயிற்சி பெற்ற சுகாதார
நிபுணர்களிடமிருந்து மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.
சட்ட
ஆலோசனை
பாதிக்கப்பட்ட குழந்தையின்
குடும்பத்தினர் அல்லது பாதுகாவலர் தங்கள் விருப்பப்படி, சட்ட ஆலோசகர்
மூலம் சட்ட ஆலோசனையை வழங்குவதற்கு உரிமை உண்டு.
மேலும் அறிந்து கொள்வோம்
குழந்தை
உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் (NCPCR) மார்ச் 2007- இல் குழந்தை உரிமைகள் சட்டம் (CPCR), 2005-ன் கீழ்
அமைக்கப்பட்டது. இந்தச் சட்டம் பொதுவுடைமைக் கொள்கை, குழந்தை
சட்டங்களை மீற முடியாமை மற்றும் நாட்டில் காணப்படும் குழந்தைகள் தொடர்பான
கொள்கைகளின் அவசரத்தை வலியுறுத்துகிறது.
18 வயது வரையிலான அனைத்து குழந்தைகளின் பாதுகாப்புக்கும் சமமான
முக்கியத்துவம் உள்ளது. பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ள குழந்தைகளுக்கு
முன்னுரிமை நடவடிக்கை கொள்கைகளை வரையறுக்கிறது.
மறுவாழ்வு
பள்ளியில் மீண்டும் சேர்த்து
கல்வியைத் தொடரச் செய்வதே பாதிக்கப்பட்ட குழந்தைக்கான மறுவாழ்வாகும்.
அக்குழந்தையானது படிப்படியாக மீண்டும் தன்னுடைய இயல்பான நிலைக்கு மீண்டு வருவதற்கு
இது அவசியமானதாகும்.
சமுதாய
அடிப்படையிலான முயற்சிகள்
குழந்தைகளைத் தவறாகப்
பயன்படுத்துவதிலிருந்து தடுக்க விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல்.
உலகளாவிய முறையில்
வலியுறுத்தப்படும் முக்கியமான சமூகக் கொள்கை, குழந்தைகளை பாலியல் முறையிலான தவறான
பயன்பாட்டிலிருந்து தடுக்கும் முயற்சிகளாகும். இதனை மேற்கொள்வது பெற்றோர் மற்றும்
நிறுவன அமைப்புகளின் பொறுப்பாகும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலமாக
குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய அறிவுரைகளாவன,
· சந்தேகப்படுகின்ற நபரிடம் அல்லது தெரியாத அந்நிய
நபரிடம் பேசுவது மற்றும் அவர் அருகில் செல்வது கூடாது.
· எந்தவொரு தெரியாத நபருடனும் தனியாக இருக்கக் கூடாது.
· அரசு அல்லது தனியார் போக்குவரத்து வாகனங்களில் (பேருந்துகள், ஆட்டோ,
ரயில்) தனியாக பயணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
· பெற்றோருக்குத் தெரியாமல், எவரிடமிருந்தும் பணம், பொம்மைகள்,
பரிசுகள் அல்லது சாக்லேட்டுகள் போன்றவற்றை வாங்கக் கூடாது.
· தெரிந்த அல்லது தெரியாத நபர்களைத் தொட அனுமதிக்கக் கூடாது.
நம் குழந்தைகள் கண்ணியமான, எந்த
வகையிலும் வன்முறையற்ற, பாதுகாப்பான வாழ்க்கையை
மேற்கொள்வதற்கான சூழலை உறுதி செய்வது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதரின்
பொறுப்பாகும்.