மருந்துகளின்
தவறான பயன்பாடு
மருந்துகள் வழக்கமாக
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டு, நோயிலிருந்து
குணமடைந்த பின் கைவிடப்படுகின்றன. மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதை
வழக்கமாக்கிக் கொள்பவர்கள், அதற்கு அடிமையாகின்றனர். இதுவே மருந்துக்கு (போதைக்கு) அடிமையாதல் அல்லது மருந்துகளின்
தவறான பயன்பாடு என்றழைக்கப்படுகிறது.
ஒரு நபரின் உடல், மனம்
ஆகியவற்றின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்துவதன் மூலமோ, மனச்சோர்வு
அல்லது தொந்தரவுக்கு உள்ளாக்குவதன் மூலமோ, அந்நபரின் உடல்,
உயிரியல், உளவியல் அல்லது சமூக ரீதியிலான
நடத்தையை மாற்றி அமைக்கும் மருந்து போதை மருந்து என அழைக்கப்படுகிறது. இந்த
மருந்துகள் மைய நரம்பு மண்டலத்துடன் தொடர்பு கொண்டு உடல் மற்றும் மனதளவில்
பாதிப்பை உண்டாக்குகின்றன.
சில வகையான மருந்துகள் மனோவியல்
மருந்துகள் எனப்படுகின்றன. அவை மூளையின் மீது செயல்பட்டு, அவற்றின்
செயல்பாடுகளான நடத்தை, உணர்வறி நிலை, சிந்திக்கும்
திறன், அறிநிலை ஆகியவற்றை மாற்றியமைக்கின்றன. இவை மனநிலை
மாற்றும் மருந்துகள் என குறிப்பிடப்படுகின்றன.
இம்மாதிரியான மருந்துகளை
உட்கொண்டு, முழுவதுமாக அம்மருந்துகளை சார்ந்துள்ள நபர்களால், அம்மருந்துகள்
இன்றி உயிர்வாழ இயலாது. இந்நிலையானது மருந்தினை சார்ந்திருத்தல் எனக்
குறிப்பிடப்படுகிறது.
உடல் மற்றும் மனம் சார்ந்திருத்தல்
• இயல்பான நல்ல நிலையில்
தன்னுடைய உடல் செயலியல் நிலையைப் பராமரிக்க மருந்துகளைச் சார்ந்திருத்தல்.
• மருந்துகள் மன அழுத்தத்தைக்
குறைப்பதற்கு உதவுகின்றன என்ற உளவியல் சார்ந்த உணர்வைக் கொண்டிருத்தல்.
உங்களுக்குத் தெரியுமா?
• மருந்துகளின்
தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் - ஜுன் 26.
• 1985 -
ஆம் ஆண்டில் போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள்
சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இளம் பருவத்தினரிடையே ஏற்படும்
எதிர்மறையான விளைவுகளாவன
· படிப்பில் செயல்திறன் குறைதல், கல்லூரி மற்றும் பள்ளிகளில் இடைநிற்றல்.
· தன் சுகாதாரத்தில் ஆர்வமின்மை, தனிமை, மன அழுத்தம், சோர்வு,
ஆக்ரோஷமான நடத்தைகள்.
· குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவுநிலை சிதைந்து
போகுதல்.
· உணவு மற்றும் தூங்கும் பழக்கங்கள் மாறுபடுதல்.
· உடல் எடை மற்றும் பசி ஆகியவற்றில் ஏற்படும் ஏற்ற
இறக்கம்.
· எப்பொழுதும் மருந்துகள் பெறுவதற்கான பணம்
கிடைக்கும் எளிய வழிகளைத் தேடுதல்.
· எய்ட்ஸ் மற்றும் ஹெபடைடிஸ் தொற்று ஏற்படுவதற்கான
வாய்ப்புகள்.
உங்களுக்குத் தெரியுமா?
உலக
சுகாதார நிறுவனம் (WHO) 1984 மருந்துகளின் போதை (அடிமையாதல்)
அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்ற வார்த்தைக்குப் பதிலாக மருந்துகளை
சார்ந்திருத்தல் என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளது.
மருந்து அடிமையாதல் மீட்பு
மேலாண்மை என்பது சிக்கலான மற்றும் கடினமான பணியாகும். மருந்துக்கு
அடிமையாதலிலிருந்து ஒருவரை மீட்பது என்பது நீண்ட காலம் பிடிக்கும், மெதுவான ஒரு
வழியாகும்.
குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள்
மற்றும் சமுதாயம் உட்பட அனைவரும் இதில் ஒட்டு மொத்தமாக முக்கியப் பங்கு வகிக்க
வேண்டும்.
நச்சு நீக்கம்
சிகிச்சையின் முதல் கட்டம்
நச்சு நீக்கமாகும். இது மருந்துகளைப் படிப்படியாக நிறுத்தி, அடிமையானவரை அறிகுறிகளிலிருந்து
மீட்பதற்கு உதவுகிறது. இதனால் அவர்கள் கடுமையான உடல் மற்றும் உணர்வு ரீதியான
தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். குறிப்பிட்ட மருந்துகளை வழங்குவதன் மூலம் இதனை
கவனமாகக் கையாளலாம்.
உளவியல் சிகிச்சை
உளவியல் சிகிச்சையில்
தனிப்பட்ட மற்றும் குழு ஆலோசனை, உளவியலாளர்கள் மற்றும் ஆலோசகர்களால்
வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சையானது அடிமையானவர்களின் மன அழுத்தத்தைக்
குறைப்பதற்கான முயற்சிகள், தினசரி சிக்கல்களைத்
தீர்ப்பதற்கான புதிய வழி முறைகளை கற்றுத் தருதல், போதுமான
உணவு, ஓய்வு மற்றும் அமைதி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை
சமுதாயப் பணியாளர்கள் குடும்ப
உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குவதனால், அவர்கள் போதைக்கு அடிமையான தங்கள் குடும்ப
உறுப்பினர்களை நிராகரிக்கும் அணுகுமுறையை மாற்றிக் கொள்கின்றனர். அதனால்
போதைக்கு அடிமையானவர்கள் அவர்கள் குடும்பத்தினராலும், சமுதாயத்தாலும்
ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.
மறுவாழ்வு
அவர்களுக்கு முறையான தொழில்சார்
பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம், அவர்கள் நலமான வாழ்க்கை வாழவும், சமுதாயத்தில் பயனுள்ள அங்கத்தினராக மாறவும் வழிவகுக்கிறது.