வங்கியியல் - பணச் சந்தை மற்றும் மூலதனச் சந்தை | 12th Economics : Chapter 6 : Banking
பணச் சந்தை (Money Market)
அதிக நீர்மைத் தன்மையை கொண்டதும் குறுகிய காலத்தில் முதிர்ச்சியுறுவதுமான நிதிக் கருவிகளை கையாளும் சந்தையே பணச் சந்தை எனப்படுகிறது. ஒரு நாள் முதற்கொண்டு ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் நிதிக் கருவிகள் இச்சந்தையில் கையாளப்படுகிறது. இங்கு கையாளப்படும் நிதிக்கருவிகள் அரசுப் பத்திரங்கள், வணிகப் பத்திரங்கள், அழைப்புப் பணம், வைப்புச் சான்றுகள், வங்கியாளர் ஏற்புகள், மாற்றுச் சீட்டுகள், மறு வாங்கல் ஒப்பந்தங்கள், கருவூல உறுதிச் சீட்டுக்கள், அந்நிய செலாவணிகள் போன்றவை ஆகும். இவைகள் அனைத்தும் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் வகையிலான கருவிகள் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள், மேம்பாட்டு வங்கிகள், வட்டார வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், மற்றும் இதர அமைப்புசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை குறுகிய கால நிதியை பணச்சந்தையில் அளிக்கின்றது.
மூலதனச் சந்தை (Capital Market)
நீண்டகால நிதிக் கருவிகளை வாணிபம் செய்யும் சந்தை மூலதனச் சந்தை எனப்படுகிறது. உற்பத்தி நோக்கில் நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு தேவைப்படும் நிதியினை திரட்டும் இடமாக மூலதனச் சந்தை இருக்கிறது. மூலதனச் சந்தையில் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான நிதிக் கருவிகள் கடன் பத்திரங்களும் சமபங்குகளும் ஆகும். ஆனால் இப்பொழுது அக்கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேற்கூறியவையுடன் அந்நிய செலாவணி, முன்பேர வர்த்தகம் மற்றும் இதர கடன் சாதனங்களும் அடங்கும். இச்சந்தையில் தனி முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், நிதிக் கழகங்கள், வங்கிகள், அரசு, பங்கு சந்தைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களை கடனளிப்பவர்கள், கடன்பெறுவர்கள், மற்றும் வசதி செய்யும் நிறுவனங்கள் என மூன்று வகையாக பிரிக்கலாம்.