தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் | அலகு 22 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மக்களின் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவேடு (PBR) | 8th Science : Chapter 22 : Conservation of Plants and Animals
மக்களின் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவேடு (PBR)
மக்களின் பல்லுயிர் பன்முகத்தன்மை பதிவேடு என்பது ஒரு குறிப்பிட்ட
பகுதி அல்லது கிராமத்தின் நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகை உள்ளிட்ட அங்கு கிடைக்கக்கூடிய
அனைத்து உயிர் வளங்கள் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட ஒரு ஆவணமாகும். உயிர் வளங்கள்
என்பவை தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அல்லது அவற்றின் பாகங்கள், மரபணுப் பொருள்கள்
மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் பயனுள்ள பொருள்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன. உயிரியல்
பன்முகத்தன்மை சட்டம், 2002 இன் விதிகளின்படி ஒவ்வொரு உள்ளூரிலும் பல்லுயிர் மேலாண்மைக்
குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தேசிய பல்லுயிர் ஆணையம் மற்றும் மாநில பல்லுயிர்
வாரியங்களின் வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் உயிரினங்களின் பல்லுயிர் பதிவேடுகளைத்
தயாரிக்கிறது.
இந்தப் பதிவேட்டைத் தயாரிப்பதன் மூலம் விலங்குகளைப் பேணுதல்,
அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல், விலங்குகளின் அபிவிருத்தி மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை
தொடர்பான தகவலை சேகரித்தல் ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன. ஒரு பகுதியில் உள்ள தாவரம்,
உணவு ஆதாரம், வனவிலங்கு, மருத்துவ மூலங்கள், பாரம்பரிய அறிவு ஆகியவை சார்ந்த உயிரினங்களின்
பன்முகத்தன்மை பற்றிய முழுமையான தகவல்களை இந்தப் பதிவேடு கொண்டுள்ளது.