தமிழ்நாடு - பீடபூமிகள் | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu
பீடபூமிகள்
தமிழ்நாட்டிலுள்ள
பீடபூமி மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே
அமைந்துள்ளது. ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் சுமார் 60,000 சதுர
கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின்
வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பாரமஹால் பீடபூமியானது மைசூர் பீடபூமியின் ஒரு
பகுதியாகும். இதன் உயரம் சுமார் 350 மீட்டர் முதல் 710 மீட்டர்
வரை காணப்படுகிறது. இந்தப் பீடபூமியில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்
அமைந்துள்ளன.
கோயம்புத்தூர்
பீடபூமியானது நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இதன்
உயரம் 150 மீட்டர் முதல் 450 மீட்டர்
வரை மாறுபடுகிறது. இப்பீடபூமி சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை
உள்ளடக்கியுள்ளது. மோயர் ஆறு இப்பீடபூமியை மைசூர் பீடபூமியில் இருந்து
பிரிக்கிறது.
மேற்கு
தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இப்பீடபூமியில்
பள்ளத்தாக்குகளை உருவாக்கி உள்ளன. நீலகிரி பகுதிகளில் பல மலையிடை பீடபூமிகள்
காணப்படுகின்றன. சிகூர் பீடபூமி அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மதுரை
பீடபூமி, மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது. இது மேற்கு
தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை நீண்டுள்ளது. வைகை மற்றும் தாமிரபரணி வடிநிலப்
பகுதிகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.