தாவரவியல் - வாழ்காலம் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm
வாழ்காலம் (Lifespan)
வாழ்காலத்தின் அடிப்படையில் தாவரங்கள் ஒருபருவத்தாவரம்,
இருபருவத்தாவரம், பல் பருவத் தாவரம் என்று மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன.
I.
ஒருபருவத் தாவரம்:
ஒரே வளரும் பருவத்தில் தன் வாழ்க்கைச் சுற்றினை முடிக்கின்ற
தாவரங்கள் ஒரு பருவத் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: மக்காச்சோளம்,தர்பூசணி,
நிலக்கடலை, சூரியகாந்தி, நெல்.
II.
இருபருவத் தாவரம்:
இவ்வகை தாவரங்கள் தன் வாழ்க்கைச் சுற்றினை இரண்டு பருவங்களில்
முடிக்கின்றன. முதல் பருவத்தில் அவை வளர்ந்து பெரிதாகின்றன. இரண்டாம் பருவத்தில் பூத்து,
காய்த்து பின் மடிகின்றன. எடுத்துக்காட்டு: வெங்காயம், லெட்யூஸ், ஃபென்னல் (சோம்பு),
கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ்.
III.
பல்பருவத் தாவரம்:
இவ்வகை தாவரங்கள் பல வருடங்கள் வளரக்கூடியவை. இவை தன்
வாழ்காலத்தில் பலமுறை பூத்துக் காய்க்கும். ஒவ்வொரு வருடமும் பூத்துக் காய்க்கும் தாவரங்கள்
பல்காய்ப்புத் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: மா, சப்போட்டா. சில தாவரங்கள் பல வருடங்கள் உடல் வளர்ச்சியைப் பெற்று,
தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் பூத்து, காய்த்து பின் மடிகின்றன. இவை ஒரு காய்ப்புத் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: மூங்கில், தாழிப்பனை,
அகேவ் (யானை கற்றாழை), மியூசா (வாழை).