அமெரிக்க விடுதலைப் போர் | வரலாறு - டவுன்ஷெண்ட் சட்டங்கள் | 9th Social Science : History: The Age of Revolutions
டவுன்ஷெண்ட் சட்டங்கள்
இங்கிலாந்து நிதியமைச்சர் சார்லஸ் டவுன்ஷெண்ட் 1767இல் இறக்குமதிப்பண்டங்களின் மீதான புதிய வரிகளை அறிமுகம் செய்தார். இவை டவுன்ஷெண்ட் சட்டங்களென அறியப்பட்டன. இச்சட்டங்கள் குடியேற்றங்கள் இறக்குமதி செய்யும் கண்ணாடி,
காகிதம், வர்ணப்பூச்சு (paint),
தேயிலை, ஈயம் ஆகியவற்றின் மீது வரி விதித்தன. மேலும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் நுழைந்து சட்டத்திற்குப் புறம்பாகக் கடத்திக்கொண்டுவரப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்பதைச் சோதனையிடும் அதிகாரத்தையும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வழங்கின.
டவுன்ஷெண்ட் சட்டங்களுக்குப் பரவலான எதிர்ப்புகள் தோன்றின. பாஸ்டனைச் சேர்ந்த வர்த்தகர்கள் இங்கிலாந்துப் பொருட்களைப் புறக்கணிக்கும் வகையில் இறக்குமதி செய்வதில்லை என முடிவு செய்தனர். விரைவில் ஏனைய குடியேற்றங்களும் இவ்வெதிர்ப்பில் பங்கேற்றன. பெண்கள் தங்களுக்கென "விடுதலையின் புதல்விகள்" (Daughters of Liberty) எனும் அமைப்பை ஏற்படுத்திக்கொண்டனர். அரசியலைமைப்புக் கோட்பாட்டிற்கு உட்பட்டதாக எதிர்ப்பு இருக்க வேண்டுமெனக் கூறி மக்களை அமைதிகாக்கும்படி தலைவர்கள் அறிவுறுத்தினர். அதேநேரத்தில் எதிர்ப்புகளைச் சந்திக்க இங்கிலாந்து அதிக எண்ணிக்கையில் இராணுவ வீரர்களைக் குவித்தது. இது மக்களை மேலும் ஆத்திரம் கொள்ளச் செய்தது. 1770ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாஸ்டனில் தங்கள் மீது பனிக்கட்டி உருண்டைகளை வீசிய கூட்டத்தின் மீது இங்கிலாந்து இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இத்துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வு பாஸ்டன் படுகொலை என வர்ணிக்கப்பட்டது. இதன் விளைவாகப் பத்திரிகைகள்,
சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் மூலம் தீவிரமான ஆங்கிலேயர் எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வெதிர்ப்புகள், புறக்கணிப்புகள் ஆகியவற்றின் விளைவாக இங்கிலாந்து அரசு டவுன்ஷெண்ட் சட்டத்தை ரத்து செய்தது. இருந்தபோதிலும் தேயிலையின் மீது விதிக்கப்பட்ட வரி விலக்கப்படாமல் நீடித்தது. இதன்மூலமாக கிழக்கிந்தியக் கம்பெனி தனது தேயிலையை அமெரிக்காவிற்குக் கொண்டு சென்று விற்று லாபம் ஈட்ட ஊக்குவிக்கப்பட்டது. இம்முடிவு குடியேற்றங்களைச் சேர்ந்த தேயிலை வணிகத்திற்குப் பாதகமாய் அமைந்ததால் அந்நியநாட்டுத் தேயிலையைப் புறக்கணிப்பதெனக் குடியேற்றங்கள் முடிவு மேற்கொண்டன.