பயன்கள், தோற்றம் மற்றும் விளையுமிடம் - உணவுத் தாவரங்கள் - உணவுத் தாவரங்கள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
உணவுத் தாவரங்கள்
ஏறக்குறைய 10,000 உணவுத் தாவரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 1,500 சிற்றினங்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இருப்பினும் பெரும்பான்மை மக்களின் உணவு அடிப்படை அரிசி, கோதுமை, சோளம் ஆகிய மூன்று புல்வகைகளை மட்டுமே அதிகம் சார்ந்துள்ளது.
தானியம் எனும் சொல் சீரிஸ் (ceres) எனும் வார்த்தையிலிருந்து
உருவானது. இது ரோமானியத் தொன்மத்தில் வேளாண்மைக் கடவுளைக் குறிக்கும். தரசம் மிகுந்த
உண்ணக்கூடிய விதைகளுக்காக வளர்க்கப்படும் எல்லாத் தானிய வகைகளுமே போயேசி எனப்படும்
புல் குடும்பத் தாவரங்களாகும்.
தானியங்கள் பின்வரும் காரணங்களால் உணவுத் தாவரங்களில்
முக்கியத்துவம் பெறுகின்றன.
i. எவ்வகை வளர் சூழலுக்கும் ஏற்ப வெற்றிகரமாகத்
தகவமைத்துக் கொள்ளும் தன்மை (Colonization)
ii. எளிதில் பயிரிடப்படக்கூடியவை.
iii. அதிக அடிகிளைத்தல் (tillers) செய்யும்
தன்மையினால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் அதிக விளைச்சல் கிடைக்கச் செய்தல்
iv. செறிந்த, உலர்ந்த தானியங்களை எவ்விதச்
சேதமுமின்றி எளிதில் கையாளவும், கொண்டு செல்லவும், சேமித்து வைக்கவும் முடியும்.
v. உயர் கலோரி மதிப்புள்ள ஆற்றலை வழங்கக்கூடியவை
கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், நார்கள் மற்றும்
பலவகையான வைட்டமின்கள், கனிமங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களைத் தானியங்கள் வழங்குகின்றன.
அளவின் அடிப்படையில் தானியங்கள் இரண்டு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை (1) பெருந்தானியங்கள்
(2) சிறு தானியங்கள்.
தாவரவியல் பெயர்: ஒரைசா சட்டைவா
தேங்கும் நிலை நீரில் வளரும் பகுதி நீர்வாழ்த்
(semi aquatic) தாவரம் நெல் முக்கியமான உணவுப்பயிரான இது பயிரிடப்படுவதிலும் உற்பத்தியிலும்
கோதுமைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கார்போஹைட்ரேட்டை வழங்கும்
முக்கிய ஆதாரமாக அரிசி உள்ளது.
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
நெல்லின் தோற்ற மையம் தென்கிழக்கு ஆசியா எனக்
கருதப்படுகிறது. சீனா, இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் நெல் பயிரிட்டதற்கான தொன்மைக்கால
சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. நெல் தமிழகத்தின் டெல்டா மற்றும் பாசனப் பகுதிகளில்
பயிரிடப்படுகிறது.
அரிசி
கலோரி
மிகுந்த எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு. இது தெற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில்
முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
அவல்
(Flaked Rice) / பொரி (Puffed Rice) போன்ற அரிசி பொருட்கள் காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
அரிசி தவிட்டிலிருந்து பெறப்பட்ட தவிட்டு எண்ணெய்
(Rice bran oil) சமையலிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.
உமி
(Husks) எரிபொருளாகவும், பொதி கட்டுவதற்கும், உரம் போன்றவை தயாரிக்கவும்
பயன்படுத்தப்படுகின்றன.
பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IRRI)
பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம்
(IRRI) பிலிப்பெய்ன்ஸ் தலைநகரமான மணிலாவின் லாஸ் பனோஸில் அமைந்துள்ளது. உலகிலேயே நெல்
ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்கின்ற ஒரே நிறுவனம் IRRI ஆகும்.
இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம்
வறுமை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை நீக்கி வாழ்வாதாரங்கள் மற்றும் ஊட்டச்
சத்துக்களை மேம்படுத்துவதாகும். உலகிலுள்ள எல்லா IR நெல் வகைகளும் நெல் கலப்பினப் பயிர்
பெருக்கத் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்து IRRI வெளியிட்டதாகும்.
இன்றுவரை IRRI 843 அரிசி ரகங்களை உற்பத்தி செய்து, 77 நாடுகளில் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் 1960-களின் துவக்கத்தில் IR 8 எனும் உயர்விளைச்சல் குட்டை ரக நெல் வகையை உருவாக்கியது. பஞ்சத்தைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றியதால் இது 'அற்புத அரிசி' என அனைவராலும் போற்றப்பட்டது. IR 36 இன்னொரு குறிப்பிடத்தகுந்த அதிகப் பூச்சி மற்றும் நோயெதிர்ப்பு திறன் கொண்ட அரைக்குட்டை நெல் ரகம். இந்த ரகம் உயர்விளைச்சல் மூலம் ஆசியக் குடும்பங்களில் முக்கிய உணவான அரிசியின் விலையை மலிவாக்கியது. IRRI-ன் பன்னாட்டு மரபணு வங்கி 1,17,000-க்கும் அதிகமான நெல் வகைகளைச் சேகரித்து வைத்துள்ளது. இதில் பாரம்பரிய நெல் வகைகளும், அவற்றின் உறவுடைய வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படாத நெல் வகைகளும் அடங்கும்.
கோதுமை
தாவரவியல்
பெயர்: டிரிட்டிக்கம் ஏஸ்டிவம் தோற்றம் மற்றும் விளையுமிடம்
கோதுமை பயிரிட்டதற்கான தொன்மை ஆதாரச்சான்றுகள்
செழுமை பிறை (fertile crescent) பகுதியில் கிடைத்துள்ளன. பொதுவாகப் பயிரிடப்படும் கோதுமை
ரகமான டிரிட்டிக்கம் ஏஸ்டிவம் சுமார் 7500 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகின்றது. உத்திரபிரதேசம்,
பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில்
கோதுமை அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
கோதுமை வட இந்தியாவில் முக்கிய உணவாக உள்ளது. கோதுமை மாவு ரொட்டி மற்றும் பிற அடுமனை பொருட்கள் தயாரிக்க ஏற்றது. மைதா என்றழைக்கப்படும் நார்சத்து அற்ற பதப்படுத்தப்பட்ட கோதுமை மாவு பரோட்டா, ரொட்டி மற்றும் அடுமனை பொருட்களைத் தயாரிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. முளைகட்டிய கோதுமை (malted wheat) மதுபானம், ஊட்டச்சத்து பானங்கள் போன்றவை உற்பத்தி செய்வதற்கான முக்கிய மூலப்பொருளாகும்.
தாவரவியல்
பெயர்: ஜியா மேய்ஸ் தோற்றம் மற்றும் விளையுமிடம்
இது புதிய உலகிலிருந்து (new world) தோன்றி
வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரே தானியமாகும். மத்தியப் பிரதேசம், இமாச்சலப்
பிரதேசம், பஞ்சாப் ஆகியவை இந்தியாவின் அதிக மக்காச்சோள உற்பத்தி செய்யும் மாநிலங்ளாகும்.
பெரம்பலூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், திருப்பூர் ஆகியவைதமிழ்நாட்டின் முக்கிய
மக்காச்சோள வளர்ப்புப் பகுதிகளாகும்.
மக்காச்சோளப் பொரி (பாப்கார்ன்) ஏன் வெடிக்கிறது?
சோளத்தில் மென்மையான மற்றும்
கடினமான கருவூண்திசுக்கள் உள்ளன. மக்காச்சோளப்பொரியின் பெரும்பகுதி மென்மையான கருவூண்திசுவாலானது.
இதைச் சூழ்ந்து கடினக் கருவூண்திசு உள்ளது. சூடாக்கும்போது, உட்புறத் தரசம் மற்றும்
புரதம் ஆகியவை ஜெலட்டினால் ஆன பொருட்களாக மாற்றப்படுகின்றன, மேலும், அழுத்தம் அதிகரிக்கும்போது,
மென்மையான கருவூண்திசு விரிவடைந்து, வெடிக்கும்போது ஜெலட்டின் தரசம் நுரையாக மாற்றப்படுகிறது.
அவை உடனே எளிதாய்க்கடினதன்மையடைந்து சுவையான, மொறுமொறுப்பான மக்காச்சோளப்பொரியாக மாறுகின்றது.
உற்பத்தி செய்யப்படும் பெரும்பான்மை மக்காச்சோளம்
உணவை விடத் தீவனமாகவே பயன்படுகிறது. மக்காச்சோள நீர்ப்பாகு (syrup) குழந்தைகளுக்கான
உணவுத்தயாரிப்பில் பயன்படுகின்றது மக்காச்சோளம் மாபனம் தயாரிக்கும் ஆலைகளில் மூலப்பொருளாகும்.
பொய் – தானியம் (Pseudo-cereal)
–
பொய் தானியம் எனும் சொல் புல் குடும்பத்தைச் சாராத காவரங்களிலிருந்து
பெறப்பட்டு , உண்ணப்படும் தானியங்களைக் குறிக்கிறது எடுத்துக்காட்டு : கீனோபோடியம்.
கினோவா உண்மையில் இது அமராந்தேசி குடும்பத்தைச் சார்ந்த கீனோபோடியம் கினோவா எனும் தாவரத்திலிருந்து
பெறப்படுகிறது. குளூட்டன் அற்ற முழுதானிய கார்போஹைட்ரேட்டும், முழுமையான புரதமும்
(அனைத்து ஒன்பது இன்றியமையா அமினோ அமிலங்களைக் கொண்ட கடினமான புரதம்) உடையது. மேலும்,
6,000 ஆண்டுகளாக மலைப் பகுதிகளில் உணவாக உட்கொள்ளப்பட்டு வருகிறது.