பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - மூலிகைத் தாவரங்கள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
மூலிகைத் தாவரங்கள் (Medicinal Plants)
இந்தியா மூலிகைத் தாவரங்கள் செறிந்த நாடு.
இம்மூலிகை தாவரங்கள் உள்நாட்டு பாரம்பரியத்துடனும் உலகளாவிய வர்த்தகத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலுள்ள அனைத்து நிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளிலும் (codified
systems) மருந்துகள் தயாரிக்க மூலிகைகளே ஆதாரமாக பயன்படுத்துகின்றன. தற்போது 90% மூலிகைகள்
பயிரிடப்படாத (non-cultivated) மூலங்களிலிருந்து பெறப்படுகின்றது. மூலிகை தயாரிப்புகளுக்கான
வளர்ந்துவரும் தேவை உள்நாட்டிலும், நாடுகளுக்கிடையிலும் மூலிகை வணிகத்தைப் பன்மடங்கு
அதிகரித்துள்ளது. பெருகி வரும் தேவை தற்போதைய மூலிகை வளங்களின் மேல் பெரும் சுமையை
ஏற்படுத்தி உள்ளது. எனவே, மூலிகைத் தாவரங்களைப் பயிரிடுதலுக்கான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு
அறிமுகப்படுத்தத் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களுக்கான முதல்
நிலை சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை அளிப்பதில் மூலிகைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
இத்தாவரங்கள் சிகிச்சைக்கான காரணிகளாக மட்டுமின்றிப் பாரம்பரிய மற்றும் நவீன மருந்து
தயாரிப்பில் முக்கிய மூலப்பொருட்களாகவும் பங்காற்றுகின்றன. தாவரங்களிருந்து பெறப்படும்
மருத்துவ மூலக்கூறுகளுள்ள மருந்துகள் உயிரி மருந்து (biomedicine) என்று அழைக்கப்படுகின்றது.
பொடிகள், அல்லது வேறு வகைகளில் சந்தைப்படுத்தப்படும் மருத்துவத் தாவரங்கள் தாவர மருந்துகள்
(botanical medicines) என அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில், பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற
சில மருத்துவத் தாவரங்களைப் பற்றி இந்தப் பாடத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
இவ்வகை தாவரங்கள் நாம் வாழும் இடங்களிலும், அவற்றைச் சுற்றியும் பரவலாகக் கிடைக்கின்றன.
மேலும் வீட்டுத் தோட்டங்களிலும் இவற்றை வளர்க்கலாம்.
தாவரவியல்
பெயர்: பில்லாந்தஸ் அமாரஸ்
குடும்பம்: யூஃபோர்பியேசி
(தற்போது பில்லாந்தேசி)
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
இத்தாவரம் வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியைப்
பிறப்பிடமாகக் கொண்டது. இந்தியாவிலும் பிற வெப்பமண்டல நாடுகளிலும் இயல் தாவரம் போல்
பரவியுள்ளது. இது பயிரிடப்படுவதில்லை , மாறாகச் சமவெளிகளிலுள்ள ஈரமான இடங்களிலிருந்து
சேகரிக்கப்படுகிறது. வனமல்லாத பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் பில்லாந்தஸ் மெட்ராஸ்பெட்டென்சிஸ்
மருத்துவத் தாவரசந்தைகளில் கீழாநெல்லி எனும் பெயரில் விற்கப்படுகின்றது. செயலாக்க மூல
மருந்து : ஃபிலாந்தின் முக்கிய வேதியப் பொருளாகும்
மஞ்சள் காமாலை (jaundice) நோய்க்கும், கல்லீரல்
பாதுகாப்பிற்கும் தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட தாவரம் கீழாநெல்லி ஆகும். டாக்டர்
S.P. தியாகராஜன் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரும் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஃபிலாந்தஸ்
அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச்
செயல்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
தாவரவியல்
பெயர்: ஜஸ்டிசியா ஆடாதோடா
குடும்பம்: அக்காந்தேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
ஆடாதொடா இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவைப் பிறப்பிடமாகக்
கொண்டது. இந்தச் சிற்றினம் தமிழ்நாட்டில் இயற்கைச் சூழலில் வளரும் தாவரமாக அறியப்படவில்லை
. ஆனால் உயிர் வேலியாகவும், கோவில்களைச் சுற்றியும் பரவலாக வளர்க்கப்படுகிறது. செயலாக்க
மூல மருந்து : வாஸ்சின்.
ஆடாதோடா மூச்சுக்குழலை விரிவடையச் செய்யும்
தன்மையுடையது. இருமல், ஜலதோசம், ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கான
சிகிச்சையில் இதன் கஷாயம் பயன்படுத்தப்படுகிறது. இது காய்ச்சலைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது.
இருமல் மருந்துகளில் இதன் சாறு முக்கியப் பொருளாக உள்ளது.
தாவரவியல்
பெயர் : ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா
குடும்பம்: அக்காந்தேசி
கசப்புகளின் அரசன்' (த கிங் ஆப் பிட்டர்ஸ்')
என அழைக்கப்படும் நிலவேம்பு பாரம்பரியமாக இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகின்றது.
செயலாக்க மூல மருந்து : ஆன்ட்ரோகிராஃபலைடுகள்
நிலவேம்பு சக்தி வாய்ந்த கல்லீரல் பாதுகாப்பி
என்பதால் கல்லீரல் நோய்களுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நிலவேம்பும் எட்டு
மூலிகைகளும் சேர்ந்து தயாரிக்கப்படும் வடிநீர் (நிலவேம்பு குடிநீர்) மலேரியா, டெங்கு
சிகிச்சையில் திறம்படப் பயன்படுத்தப்படுகிறது
தாவரவியல்
பெயர்: குர்குமா லாங்கா
குடும்பம்: ஜிஞ்சிஃபெரேசி
மஞ்சளின் காப்புரிமை அமெரிக்காவின் மிசிசிப்பி மருத்துவ மையப் பல்கலைக்கழகத்திற்குக் காயங்களைக் குணப்படுத்தும் மஞ்சளின் தன்மைக்காக 1995ல் காப்புரிமை தரப்பட்டது. இந்தக் காப்புரிமை வாய்வழி மற்றும் மேற்பூச்சுப் பயன்பாடுகளுக்காக விற்பனை செய்ய மற்றும் விநியோகிப்பதற்கான ஒரு பிரத்யேக உரிமையை வழங்குகிறது. காயங்களைக் குணமாக்கும் மஞ்சளின் பயன்பாடு பற்றிய ஒரு பொதுவான அறிவை இந்தியா கொண்டிருப்பதால், இந்திய அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR) மூலம் இக்காப்புரிமைக்கு எதிராகப் போராட இந்திய அரசு முடிவு செய்தது. இதற்காகப் பல இலக்கியங்களிருந்து CSIR ஆவணங்களைச் சேகரித்தது. காயங்களைக் குணப்படுத்தும் மஞ்சளை நீண்ட காலமாக இந்தியாவில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை அமெரிக்கா காப்புரிமை மற்றும் வர்த்தகக் குறியீட்டு அலுவலகத்தில் (USPTO) சமர்ப்பித்தது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் USPTO காப்புரிமையைத் திரும்பப் பெற்றது. எனவே மஞ்சள் பற்றிய பாரம்பரிய அறிவு உயிரிகொள்ளை (bio-piracy)-யிலிருந்து பாதுகாக்கப்பட்டது.
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
நீங்கள் ஏற்கெனவே நறுமணப் பொருட்களில் இதைப் பற்றி படித்துள்ளீர்கள். செயலாக்க மூல மருந்து:
குர்குமின் மருத்துவ முக்கியத்துவம்
குர்குமின் (மஞ்சளில் உள்ள மருத்துவத் தன்மையுள்ள
மஞ்சள் நிறக் கலவை) அதனுடைய மருத்துவப் பண்புகளால் அதிகம் அறியப்பட்டது. இது இரத்தக்குழாய்
- மூளைத்தடுப்புகளை கடந்து செல்லும் பண்புள்ளதால் அல்ஷிமர் நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு சக்தி வாய்ந்த எதிர் ஆக்சிஜனேற்றியாகவும், புற்றுநோய் எதிர்ப்பியாகவும், அழற்சி
எதிர்ப்பி , நீரிழிவு எதிர்ப்பி, பாக்டீரிய எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி, வைரஸ் எதிர்ப்பி
போன்ற சக்தி வாய்ந்த பண்புகளைப் பெற்றுள்ளது. காயங்களைக் குணப்படுத்துவதற்கான பாரம்பரிய
மருந்துகளில் இதுவும் ஒன்றாகும்.
மேலேயுள்ள பாடத்தில் நீங்கள் பல்வேறு நோய்களுக்குச்
சிகிச்சையளிக்க மருத்துவ ரீதியாகப் பயன்படும் தாவரங்களைப் பற்றி கற்றுக் கொண்டீர்கள்.
சில தாவரங்களிலிருந்து பெறப்படும் வேதிப்பொருட்கள் அல்லது மருந்துகள் ஒருவருடைய புலனுணர்வுக்
காட்சிகளில் (perception) மருட்சியை ஏற்படுத்தும் தன்மையுடையதால் புலனுணர்வுமாற்ற மருந்துகள்
என்று அழைக்கப்படுகின்றன. இம்மருந்துகள் அனைத்துப் பண்டைய கலாசாரங்களிலும் குறிப்பாக
ஷாமன் எனப்படும் மாந்திரீகக் குருமார்கள் மற்றும் பாரம்பரிய மருத்தவர்களால் பயன்படுத்தப்பட்டு
வந்தது. இதுபோன்ற பண்புகளைக் கொண்ட தாவரங்களான அபின் மற்றும் கஞ்சா என்ற இரண்டு தாவரங்களைப்
பற்றி இங்குக் காண்போம்.
தாவரவியல்
பெயர்: பப்பாவர் சாம்னிபெரம்
குடும்பம்: பப்பாவரேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
ஓப்பியம் பாப்பி தென்கிழக்கு ஐரோப்பா மற்றும்
மேற்கத்திய ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும்
உத்திரப்பிரதேசம் ஓப்பியம் பாப்பி வளர்ப்பதற்கான உரிமம் பெற்ற மாநிலங்களாகும். பாப்பி
தாவரத்தின் கனிகளின் கசிவிலிருந்து ஓப்பியம் பாப்பி பெறப்படுகிறது. இது பாரம்பரியமாகத்
தூக்கத்தைத் தூண்டுவதற்கும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்பட்டது. ஒப்பியத்திலிருந்து
கிடைக்கப்பெறும் மார்ஃபின் ஒரு வலுவான வலிநிவாரணி என்பதால் அறுவைச் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.
எனினும் ஓப்பியம் அடிமைப்படுத்தும் ஒரு மருந்தாகும்.
தாவரவியல்
பெயர்: கன்னாபிஸ் சட்டைவா
குடும்பம்: கன்னாபியேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
கஞ்சாசெடி சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டது.
குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற
மாநிலங்கள் தொழிற்சாலைகளுக்காக இத்தாவரத்தை வளர்க்க (industrial hemp) சட்டப்பூர்வ
அனுமதி பெற்றுள்ளன. கஞ்சாசெடியின் செயலாக்க மூல மருந்து டிரான்ஸ் - டெட்ராஹைட்ரோகெனாபினால்
(THC) இது பல மருத்துவக் குணங்களைக் கொண்டது. இது ஒரு சிறந்த வலிநிவாரணியாகவும் உயர்
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகவும் உள்ளது. கிளாக்கோமா எனப்படும் கண்களில்
ஏற்படும் அழுத்தத்திற்குச் சிகிச்சையளிக்க THC பயன்படுத்தப்படுகிறது. புற்று நோயாளிகளுக்கு
அளிக்கப்படும் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி சிகிச்சையில் நோயாளிகளுக்கு ஏற்படும்
குமட்டலைக் குறைப்பதில் THC பயன்படுத்தப்படுகிறது. சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும்
தன்மையுடையதால் சுவாச நோய்கள், குறிப்பாக ஆஸ்துமாவிற்கு நிவாரணியாகப் பயன்படுகின்றது.
இம்மருத்துவக் குணங்கள் காரணமாகக் கன்னாபிஸ் சில நாடுகளில் சட்டப்பூர்வமாகப் பயிரிடப்படுகிறது.
ஆனால் நீண்ட காலப் பயன்பாடு போதையை ஏற்படுத்துவதோடு, தனி நபரின் ஆரோக்கியத்திற்கும்,
சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்கிறது. எனவே பெரும்பாலான நாடுகள் இதைப் பயிரிடுவதற்கும்,
பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது.
போதைப்பொருள் தடுப்புத் துறை
(Narcotics Control - Bureau-NCB)
போதைப் பொருட்கள் பல்வேறு வடிவங்களில்
பல்வேறு வகைளில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில அங்கீகாரம் பெற்றவை, சில சட்ட
ஆங்கீகாரம் பெறாதாவை. போதைப் பொருட்களைத் தவறாகவும், கேடு விளைவிக்கும் வகையிலும் பயன்படுத்துவதால்
-
பலவகையான உடல்நலக்கேடுகளையும்,
அதீதப் பயன்பாடு இறப்பையும் ஏற்படுத்தும். இந்தியாவின் போதைப்பொருள் தடுப்புத்துறை
என்பது போதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும் மற்றும் அதன் நுண்ணறிவுப் பிரிவாகும்.
மேலும் போதை மருந்து கடத்தல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதலைத் தடுக்கும் பொறுப்பும்
இத்துறைக்கு உள்ளது.